Saturday, April 4, 2015

இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள்

* இடது கையால் ஆசனம் போட்டால், ஆயுள் குறைவும்; எண்ணெய் தேய்த்தால், புத்திர நாசமும் ஏற்படும்; சாப்பாடு போட்டுக் கொண்டால் செல்வம் அழியும்; படுக்கையை போட்டால் இருப்பிடம் சேதமாகும்.
* ஜோதிடர், குரு, நோயாளி, கர்ப்பிணி, மருத்துவர், சந்நியாசி முதலியோருக்கு, அவர்களுடைய ஆபத்துக் காலத்தில் கண்டிப்பாக உதவ வேண்டும்; இது, மிகவும் புண்ணியம்.
* சகோதரன் அல்லது சகோதரி தாழ்ந்த நிலையிலிருந்தால், அவர்களுக்கு உதவ வேண்டும்.
* அண்ணியை தினசரி வணங்க வேண்டும்.
* பசு, தேர், நெய்குடம், அரச மரம், வில்வம், அரசுடன் சேர்ந்த வேம்பு இவை எதிரில் செல்ல நேரும் போது, வலது புறம் சுற்றிச் செல்ல வேண்டும்.
* குடும்பஸ்தன் ஒரு ஆடை மட்டும் அணிந்து உணவு உட்கொள்ளக் கூடாது. ஒரு கையை தரையில் ஊன்றி சாப்பிடவோ, துணியில்லாமல் குளிக்கவோ, சூரியனுக்கு எதிரில் மலஜலம் கழிக்கவோ கூடாது.
* கன்றுக்குட்டியின் கயிறை தாண்டவோ, மழை பெய்யும்போது ஓடவோ, தண்ணீரில் தன் உருவத்தை பார்க்கவோ கூடாது.
* நெருப்பை வாயால் ஊதக் கூடாது.
* கிழக்கு, மேற்கு முகமாக உட்கார்ந்து மலஜலம் கழிக்கக் கூடாது.
* எதிர்பாராத விதத்திலோ, தவறு என்று தெரியாமலோ, பெண்கள் கற்பை இழந்துவிட்டால், புண்ணிய நதியில், 18 முறை மூழ்கி குளித்தால் தோஷம் நீங்கும்.
* திருமணம் ஆகாமல் ஒரு பெண்ணுடன் வாழ்பவனை, சுபகாரியங்களில் முன்னிறுத்தக் கூடாது.
* சாப்பிடும்போது, முதலில் இனிப்பு, உவர்ப்பு, புளிப்பு, கசப்பு பதார்த்தங்களை வரிசையாக சாப்பிட்டு, பின், நீர் அருந்த வேண்டும்.
* சாப்பிடும் போது தவிர, மற்ற நேரத்தில் இடது கையால் தண்ணீர் அருந்தக் கூடாது.
* கோவணமின்றி, வீட்டின் நிலைப் படியை தாண்டக் கூடாது.
* இருட்டில் சாப்பிடக் கூடாது. சாப்பிடும்போது விளக்கு அணைந்து விட்டால், சூரியனை தியானம் செய்து, மீண்டும் விளக்கேற்றி, அதன் பின்பே சாப்பிட வேண்டும்.
* சாப்பிட்டவுடன் குடும்பஸ்தன் வெற்றிலை போட வேண்டும். வெற்றிலை நுனியில் பாவமும், முனையில் நோயும், நரம்பில் புத்திக் குறைவும் உள்ளதால் இவற்றை கிள்ளி எறிந்து விட வேண்டும்.
* சுண்ணாம்பு தடவாமல் வெற்றிலையை வெறுமனேயோ, வெறும் பாக்கை மட்டுமோ போடக் கூடாது. வெற்றிலையின் பின்பக்கம் தான் சுண்ணாம்பு தடவ வேண்டும்.
* மனைவி, கணவனுக்கு வெற்றிலை மடித்துக் கொடுக்கலாமே தவிர, கணவன், மனைவிக்கும், மகன், தாய்க்கும், பெண், தந்தைக்கும் வெற்றிலை மடித்துத் தரக் கூடாது.
* குரு, ஜோதிடர், வைத்தியர், சகோதரியை பார்க்கச் செல்லும் போதும், ஆலயம் செல்லும்போதும் வெறுங்கையுடன் செல்லக் கூடாது.
* தலையையோ, உடம்பையோ வலக்கையினால் மட்டுமே சொறிய வேண்டும்; இரண்டு கைகளாலும் சொறியக் கூடாது.
* இரு கைகளாலும் தலைக்கு எண்ணெய் தேய்க்க கூடாது. வலது உள்ளங்கையில் எண்ணெய் ஊற்றி, தலையில் தேய்க்க வேண்டும்.
* தலைவாசலுக்கு நேரே கட்டில் போட்டோ, தரையிலோ படுக்கக் கூடாது.
* வானவில்லை பிறருக்கு காட்டக் கூடாது.
* மயிர், சாம்பல், எலும்பு, மண்டையோடு, பஞ்சு, உமி, ஒட்டாஞ்சில்லி இவற்றின் மீது நிற்கக் கூடாது.
* பேசும்போது துரும்பைக் கிள்ளிப் போடக் கூடாது.
* ஈரக்காலுடன் படுக்கக் கூடாது.
* வடக்கிலும், கோணத் திசைகளிலும் தலை வைத்து படுக்கக் கூடாது; நடக்கும் போது முடியை உலர்த்த கூடாது.
* ஒரு காலால், இன்னொரு காலை தேய்த்துக் கழுவக் கூடாது.
* தீயுள்ள பொருட்களை தரை மேல் போட்டு, காலால் தேய்க்கக் கூடாது; பூமாதேவியின் சாபம் ஏற்பட்டு, பூமி, மனை கிடைக்காமல் போய் விடும்.
* பகைவன், அவனது நண்பர்கள், கள்வன், கெட்டவன், பிறர் மனைவி இவர்களுடன் உறவு கொள்ளக் கூடாது.
* பெற்ற தாய் சாபம், செய்நன்றி கொல்லுதல், பிறன் மனைவியை கூடுதல் இவை மூன்றுமே பிராய சித்தமேயில்லாமல் அனுபவித்தே தீர வேண்டிய பாவங்கள்.
* அங்கஹீனர்கள், ஆறு விரல் உடையவர்கள், கல்வியில்லாதவர்கள், முதியோர், வறுமையில் உள்ளவர்கள் இவர்களது குறையை குத்திக்காட்டி பேசக்கூடாது.
* ரிஷி, குரு, ஜோதிடர், புரோகிதர், குடும்ப வைத்தியர், மகான்கள், கெட்ட ஸ்திரியின் நடத்தை இவர்களை பற்றி வீண் ஆராய்ச்சியில் ஈடுபடவோ, அவர்களிடம் உள்ள தவறுகளை விளம்பரப்படுத்துவதோ கூடாது.
* பிறர் தரித்த உடைகள், செருப்பு, மாலை, படுக்கை இவற்றை நாம் உபயோகிக்கக் கூடாது.
* பிணப்புகை, இளவெயில், தீபநிழல் இவை நம் மீது படக் கூடாது.
* பசுமாட்டை காலால் உதைப்பது, அடிப்பது, தீனி போடாமலிருப்பது பாவம்.
* பசு மாட்டை, கோமாதாவாக எண்ணி, சகல தேவர்களையும் திருப்திப்பட வைப்பதற்கு, அம்மாட்டுக்கு, புல், தவிடு, தண்ணீர், புண்ணாக்கு, அகத்திக்கீரை கொடுப்பது புண்ணியம்.
* தூங்குபவரை திடீரென்று எழுப்பவோ, தூங்குபவரை உற்றுப் பார்க்கவோ கூடாது.
* பகலில் உறங்குவது, உடலுறவு கொள்வது கூடாது.
* தலை, முகம் இவற்றில், முடியை காரணம் இல்லாமல் வளர்க்கக் கூடாது.
* அண்ணன் தம்பி; அக்காள் தங்கை; ஆசிரியர் - மாணவர்; கணவர் மனைவி; குழந்தை - தாய்; பசு - கன்று இவர்களுக்கு இடையில் செல்லக் கூடாது.
* வீட்டுக்குள் நுழையும் போது, தலைவாசல் வழியாகத் தான் நுழைய வேண்டும்.
* நம்மை ஒருவர் கேட்காதவரையில், நாம் அவருக்கு ஆலோசனை கூறக் கூடாது.
— என, சொல்லி முடித்தார் குப்பண்ணா.
இவற்றில் சில அறிவுரைகளை இக்காலத்தில் பின்பற்ற முடியுமா என்பது சந்தேகம் தான். சில, மூட நம்பிக்கையாகவும் தெரிகிறது. வாசகர்கள் தெரிந்து கொள்வதற்காக எழுதி விட்டேன் இனி, அவரவர் விருப்பம்!                                              http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=24546&ncat=2

No comments:

Post a Comment