Saturday, April 4, 2015

ட்வென்ட்டி 20 பரிகாரத் தலங்கள்

அரியக்குடி தென் திருவேங்கடமுடையானுக்கும் தாயாருக்கும் 12 வெள்ளிக்கிழமை அர்ச்சனை செய்து வழிபட்டால் விரும்பிய வேலை கிடைக்கும்.

திருநாங்கூர் திருப்பதிகளுள் ஒன்றான திருக்காவளம்பாடி ராஜகோபால சுவாமிக்கு அவலும் வெண்ணெயும் நிவேதித்தால் மழலை வரம் கிட்டும்.

திருக்கோலக்காவில் அருளும் தொனிப்ரதாம்பாளுக்கு வாக்வாதினி அர்ச்சனை செய்து, அம்பிகைக்கு அபிஷேகித்த தேனை உண்ணச் செய்தால் சரியாகப் பேச வராத குழந்தைகள் நன்கு பேசும்.

செங்கல்பட்டிற்கு அருகில் உள்ள சிராத்த சம்ரட்சணப்பெருமாளை தொடர்ந்து அமாவாசையில் தரிசித்தால் பித்ரு தோஷங்களும் பி த்ரு சாபங்களும் விலகும்.

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் உள்ள வானமாமலைப்பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட எண்ணெயை சரும நோய் உள்ளவர்கள் தடவி வர அந்த நோய் நீங்கும்.

கடும் ஜுரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயத்தில் அருளும் ஐராவதேஸ்வரருக்கு மிளகு அரைத்துத்  தடவி வெந்நீரால் அபிஷேகம் செய்து அர்ச்சிக்க, காய்ச்சல் விலகிவிடும்.

சிறுநீரக நோய்கள் நீங்க லால்குடிக்கு அருகே உள்ள ஊட்டத்தூரில் அருளும் பஞ்சநதக் கல்லால் செய்யப்பட்ட நடராஜப்பெருமானை தரிசித்து, வெட்டிவேர் மாலை சாத்தி தினமும் வெட்டிவேர் போட்ட நீரை அருந்தலாம்.

திருக்காரவாசல் கண்ணாயிரமுடையாருக்கு மூலிகைத் தைல அபிஷேகம் செய்து, அத்திப்பழத்தை நிவேதித்து பிரசாதமாகப்பெற்று 48 நாட்கள் தைலத்தை தலையில் தேய்த்தும் தேனில் ஊறிய அத்திப்பழத்தை உண்டும் வந்தால் கண் நோய்கள் தீரும்.

திருநீலக்குடி மனோக்ஞநாத சுவாமிக்கு அர்ச்சனை செய்து நீல நிற பட்டுத்துணியையும் எள்ளையும் தானமளித்தால் மரண பயம்  விலகும்.

சென்னை-மயிலாப்பூர் கோலவிழியம்மன் ஆலயம் அருகில் உள்ள வாலீஸ்வரரை வணங்கினால் எதிரிகள் தொல்லை விலகும்.

திருநெல்வேலி மாவட்டம், கோடகநல்லூர் ப்ருஹன்மாதவனுக்கு அர்ச்சனை செய்தால் கனவில் பாம்பு வந்து தொல்லை தராது. இது  ஒரு சர்ப்பதோஷ பரிகாரத் தலம்.

வைத்தீஸ்வரன் கோயில் வைத்யநாதரையும் தையல்நாயகியையும் வழிபட்டு, ஆட்டு வாகனத்தில் ஆரோகணித்திருக்கும் அங்காரகனுக்கு அர்ச்சனை செய்ய, செவ்வாய் தோஷம் நீங்கும்.

திருச்சி கன்டோன்மென்ட் லாசன்ஸ் சாலையில் உள்ள ஐயப்பன் ஆலயத்தில் உள்ள நாகதேவதைகளுக்கு பூஜை செய்து பிரசாதமாகத் தரப்படும் பால் பாயசத்தை உண்டு, மஞ்சளை தினமும் அணிந்து கொள்ள, திருமணத் தடை, புத்திரபாக்கியத் தடை நீங்குகின்றன.

திருவிற்குடி கங்களாஞ்சேரி வீரட்டேஸ்வரரையும் அம்பிகையையும் தரிசித்து ஆலயத்திலிருந்து கல் எடுத்து வந்து வீட்டில் வைத்தால் வாஸ்து தோஷம் நீங்கும்.

லால்குடி திருமங்கலம் சாமவேதீஸ்வரர் ஆலய சனிபகவானை தரிசித்து அர்ச்சனை செய்தால் இழந்த செல்வங்களை மீண்டும் பெறலாம்.

திருச்சி-துடையூர் கடம்பவன விஷமங்களேஸ்வரர் திருக்கோயில் அருகிலுள்ள வாதக்கல் முனி சமாதியை வழிபட்டால் அனைத்து வகை வாத நோய்களும் நீங்கும்.

கலைகளில் சிறந்து விளங்க ஊத்துக்காடு காளிங்கநர்த்தனருக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.

எல்லா பிரார்த்தனைகளும் நிறைவேற நாச்சி யார்கோயில் கல் கருடனுக்கு அர்ச்சனை செய்து அமிர்தகலசம் எனும் நைவேத்தியத் தைப் படைக்க வேண்டும்.

மாதவிடாய்க் கோளாறுகள் நீங்க பெட்டவாய்த்தலை (திருச்சி) மத்யார்ஜுனர் ஆலய பூவாய் சித்தர் சந்நதியில் சீட்டெழுதிக் கட்டினால் நிவாரணம் பெறலாம்.

சாக்கோட்டை சிவபுரத்தில் உள்ள சிவகுருநாதசுவாமி ஆலயத்தில் பைரவமூர்த்திக்கு வடைமாலை சாத்தி வழிபட, வழக்குகளில்  வெற்றி பெறலாம்.

No comments:

Post a Comment