Saturday, February 22, 2014

சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகே ‘தாய்வழி இயற்கை உணவகம்’ நடத்தி வரும் ஆர்.மகாலிங்கம் கூறியதாவது:
நண்பர்கள் சரவணன், ரவியுடன் சேர்ந்து கடந்த ஜனவரி 1-ம் தேதி சைதை ரயில் நிலையம் அருகே இந்த உணவகத்தை தொடங்கினேன். காலையில் 7 வகையான முளைகட்டிய தானியங்கள், சளி, இருமல் தீர்க்கும் தூதுவளைக் கீரை, குடல் புண் நீக்கும் மணத்தக்காளி கீரை, சர்க்கரை நோயாளிகளுக்கு வெந்தயக் கீரை, கொழுப்பு நீக்கும் கொள்ளு சூப், மூட்டு வலி குணமாக்கும் முடக்கத்தான் கீரை ஆகிய சூப் வகைகள், நெல்லிக்காய், கருவேப்பிலை, அருகம்புல், வாழைத்தண்டு சாறு மற்றும் தேனில் ஊறவைக்கப்பட்ட அத்தி, நெல்லிக்காய், கடுக்காய் ஆகியவற்றையும் விற்கிறோம்.
மாலையில் 6 வகையான சூப், கேரட் பால், தேங்காய் பால் விற்கிறோம். இவற்றை நாங்களே தயாரிக்கிறோம். சிவகாசியில் உள்ள தாய் வழி இயற்கை உணவகத்தில் பயிற்சி எடுத்துக்கொண்டோம். ஆரம்பத்தில் 30 பேர்தான் வந்தனர். இப்போது தினமும் 200-க்கும் மேற்பட்டோர் வருகின்றனர். மெரினா மற்றும் பூங்காக்கள் அருகில் கடைகளை திறக்க திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு மகாலிங்கம் கூறினார்.

விசா பெற வழிகாட்டும் வலைத்தளம்!

வெளிநாட்டு பயணங்களைத் திட்டமிடும்போது எழக்கூடிய முக்கிய கேள்வி, விசா பெறுவது எப்படி? இந்த கேள்விக்கு பதில் தெரிய கொஞ்சம் இணைய ஆராய்ச்சி தேவை.
முதலில் பயணம் செல்ல உள்ள நாட்டிற்கு விசா தேவையா என தெரிந்துகொள்ள வேண்டும். அதன்பிறகு விசாவுக்கு விண்ணப்பிப்பது எப்படி என அறிய வேண்டும். ஒரு சில நாடுகளுக்கு விசா தேவையில்லை. ஒரு சில நாடுகளுக்கு அங்கே போய் இறங்கியவுடன் விசா வாங்கி கொள்ளலாம். பெரும்பாலான நாடுகளை பொருத்தவரை முன்கூட்டியே விசா பெற வேண்டும். நாடுகளுக்கு நாடு இது மாறக்கூடியது.
குறிப்பிட்ட சில நாடுகள் மட்டும் விசா இன்றி வரும் சலுகையை வழங்குகின்றன. இப்படி விசாவுக்கான நடைமுறைகள் பல இருக்கின்றன.
இந்தத் தகவல்களை எல்லாம் தேடி இணையத்தில் அங்கும் இங்கும் அல்லாடாமல், ஒரே இடத்தில் தெரிந்து கொள்ளும் வகையில் விசாமேப்பர்.காம் (http://www.visamapper.com) வலைத்தளம் அமைந்துள்ளது.
எந்த எந்த நாடுகளுக்கு எல்லாம் விசா இல்லாமல் செல்லலாம், எந்த எந்த நாடுகளுக்கு எல்லாம் அங்கே போய் சாவகாசமாக விசா வாங்கலாம் போன்ற தகவலகளை இந்தத் தளம் தருகிறது. அதுவும் எப்படி.., அதிகம் தேடாமல் எடுத்த எடுப்பிலேயே தெரிந்து கொள்ளும் வகையில் அழகாக உலக வரைபடத்தின் மீது விசா விவரங்களை புரிய வைக்கிறது.
இந்த தளத்தில் தோன்றும் உலக வரைபடத்தில் நாடுகள் பல்வேறு வண்ணங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அந்த வண்ணங்களுக்கான அர்த்தம் அருகே உள்ள கட்டங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வண்ணங்களை வைத்தே குறிப்பிட்ட ஒரு நாட்டின் விசா நடைமுறையை தெரிந்து கொள்ளலாம். உதாரணத்திற்கு பச்சை வண்ணத்தில் மின்னும் நாடுகளுக்கு அங்கே போய் விசா பெறலாம். மெரூன் நிறம் என்றால் முன்னதாகவே விசா பெற வேண்டும். வெளிர் பச்சை என்றால் விசாவே வேண்டாம். மஞ்சள் வண்ணம் என்றால் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சிவப்பு என்றால் விசாவே கிடையாது.
ஆக, இந்த வரைபடத்தை பார்த்தே ஒருவர் பயணம் செய்ய உள்ள நாட்டிற்கான விசா முறை என்ன என அறிந்து கொள்ளலாம். இந்த வரைபடத்தில் மேலும் ஒரு சிறப்பம்சம், நீங்கள் தேடக்கூட வேண்டாம், அதுவாகவே விவரங்களை காட்டுகிறது என்பது தான். அதாவது இந்த தளத்தில் நுழைந்ததுமே, பயனாளி எந்த நாட்டிலிருந்து விவரங்களைத் தேடுகிறார் என புரிந்து கொண்டு அந்த நாட்டுக்கான விசா நடைமுறையை வரைபடமாக காட்டுகிறது.
உதாரணத்திற்கு இந்தியாவில் இருந்து பயன்படுத்தும் போது, இந்தியாவுக்கான இடம் குடியிருக்கும் நாடு என காட்டப்படுகிறது. இந்தியர்களுக்கு மற்ற நாடுகள் எப்படி விசா தருகின்றன என்பது வண்ணங்களாக காட்டப்படுகிறது. ஆக, பயனாளி வேறு நாட்டில் இருந்து அணுகும் போது அவரது நாட்டுக்கான விசா வரைபடம் தோன்றும். அற்புதம் தான் இல்லையா?
அதே நேரத்தில் வரைபடத்தின் மீது உள்ள, 'நான் இந்த நாட்டு குடிமகன்' என குறிக்கும் கட்டத்தில் ஒருவர் தனக்கான நாட்டை தேர்வு செய்து பார்த்தால் அந்த நாட்டுக்கான உலக விசா நடைமுறையை தெரிந்து கொள்ளலாம். இந்த பகுதியில் பல்வேறு நாடுகளை கிளிக் செய்து பார்த்தால் எந்த எந்த நாடுகள் எந்த எந்த நாடுகளுக்கு விசா சலுகை அளிக்கின்றன போன்ற தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். உலக அரசியலை அறிவதற்கான சின்ன ஆய்வாகவும் இது அமையும். உலக அரசியல் யாதார்த்ததையும் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
விசா பற்றி அறிய விரும்புகிறவர்களுக்கு இந்த தளம் நிச்சயம் உதவியாக இருக்கும். ஆனால் ஒன்று, இது ஒரு வழிகாட்டித் தளமே. இதில் உள்ள விவரங்களை அதிகாரபூர்வமானதாக கொள்வதற்கில்லை. தகவலை எளிதாக தெரிந்து கொண்டு அதனை அதிகாரபூர்வ தளங்களின் வாயிலாக உறுதி செய்து கொள்வது நல்லது. மேலும் இந்த தளத்திலேயே, விடுபட்டிருக்கும் நாட்டை சேர்கக அல்லது பிழையான தகவலை சரி செய்யும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
இதைப் போலவே விசாமேப்.நெட் (http://www.visamap.net) எனும் வலைத்தளமும் விசா தொடர்பான தகவல்களை வரைபடம் மூலம் தருகிறது. விசா தகவல்களோடு தூதரக அலுலகங்கள் எங்கே உள்ளன போன்ற தகவல்களையும் அளிக்கிறது. விசா நோக்கில் பிரபலமான நாடுகளின் பட்டியலும் இருக்கிறது. ஐபோனுக்கான செயலி வடிவமும் இருக்கிறது. ஆனால் இந்த தளமும் வழிகாட்டி நோக்கிலானது தான். இதில் உள்ள தகவல்களை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
வெளிநாட்டுக்கு போக ஆசைப்படுபவர்களுக்கும், போக இருப்பவர்களுக்கும் இந்தத் தளங்கள் பயனுள்ளவைகளாக இருக்கின்றன.

Friday, February 21, 2014

ரத சப்தமி

ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சூரியன் உலா வருவதால் திதிகளில் ஏழாவது நாள் சப்தமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. செல்வம் பெருகும் இந்த விரதம் எளிமையானது.
ஏழு எருக்கம் இலைகளை தலையில் ஒன்று, மூடிய இரு கண்களில் கண் ஒன்றுக்கு ஒன்று வீதம் இரண்டு, அதுபோல தோள்பட்டைகளில் இரண்டு, கால்களில் இரண்டை வைத்து நீராட வேண்டும். தலையில் வைக்கும் இலையில், பெண்கள் மஞ்சள் பொடி மற்றும் அட்சதையும், ஆண்கள் அட்சதை மட்டும் வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வது ஆரோக்கியத்தையும், செல்வ வளத்தையும் தரும்.
ரத சப்தமி நாளில் செய்யப்படும் தர்மத்திற்கு பல மடங்கு புண்ணியம் உண்டு. இந்த நாளில் தொடங்கும் தொழில் பெருகும். பெண்கள் உயர் நிலையை அடைவர். கணவனை இழந்தவர்கள் இந்த விரதம் அனுஷ்டித்தால் அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை ஏற்படாது என்கின்றன புராணங்கள்.
இந்நாள் தியானம் செய்ய உகந்தது. அன்றைய தினம் சூரிய உதயத்தின் போது இவ்வாறு எருக்க இலையைத் தலையில் வைத்துக் குளித்து விரதம் அனுஷ்டித்தால் செல்வந்தர் ஆக உயர்வார்கள் என்கிறது புராணம்.
பீஷ்மர் செய்த பாவம்
எருக்கம் இலையின் மகத்துவம் வியாசரால் மகாபாரதத்தில் விளக்கப்பட்டுள்ளது. மகாபாரதப் போரில் வீழ்த்தப்பட்ட பீஷ்மர் நினைத்த நேரத் தில் உயிர் விடலாம் என்ற வரம் பெற்றவர். உத்தராயணத்தில் உயிர் விடவேண்டி அம்புப் படுக்கையில் படுத்திருந்து காத்திருந்தார். காலம் போய்க்கொண்டே இருந்தது. பீஷ்மரின் உயிரோ பிரியவில்லை. அப்பொழுது அவரைப் பார்க்க வந்த வேத வியாசரிடம், நான் என்ன பாவம் செய்தேன்? ஏன் இன்னும் என் உயிர் போகவில்லை?" என்று மனம் வருந்தினார் பீஷ்மர். அதற்கு வியாசர், "பீஷ்மா, ஒருவர், தன் மனம், மொழி, மெய்யால் தீமை புரியாவிட்டாலும், பிறர் செய்யும் தீமைகளைத் தடுக்காமல், இருப்பதும் கூடப் பாவம்தான், அதற்கான தண்டனையை அவரவர்களேதான் அனுபவித்துத் தீர வேண்டும்“ என்று கூறினார்.
பீஷ்மருக்கு, சபை நடுவே பாஞ்சலியின் உடைகளைக் களைந்து துச்சாதனன் அவமானம் செய்தபோது அதைத் தடுக்காமல் இருந்து மிகப் பெரிய தவறு செய்தது நினைவிற்கு வந்தது. இதற்கு விமோசனம் இல்லையா என்று கேட்டதற்கு, வியாசர், ``எப்பொழுது உன் பாவத்தை உணர்ந்தாயோ, அப்போது அப்பாவம் அகன்றுவிட்டாலும் அனைத்தையும் கண்டும் காணாமல் இருந்த கண்கள், செவி, வாய், தோள், கைகள், புத்தி உள்ள தலை ஆகியவை தண்டனையை அனுபவித்துதானே ஆக வேண்டும “ என்றார் வியாசர்.
சூரியனின் நெருப்பைக் கொண்டு தன்னைப் சுட்டுப் பொசுக்குமாறு வேண்டுகிறார் பீஷ்மர். இதற்கு எருக்க இலையை காட்டிய வியாசர், ``அர்க்கம் என்றாலே சூரியன் என்று பொருள். பிரம்மச்சாரியான விநாயகருக்கு உகந்தது எருக்க இலை. அதேபோல் பிரம்மச்சாரியான உன்னையும் இந்த எருக்க இலையால் அலங்கரிக்கிறேன்” என்றார்.
சிறிது சிறிதாக அமைதியடைந்த பீஷ்மர் ஏகாதசி யன்று உயிர் நீத்தார். பீஷ்மருக்கு வாரிசுகள் யாரும் இல்லாததால் நீத்தார் கடன் செய்வது குறித்து வியாசரிடம் வேண்டுகிறார் தர்மர். அதற்கு பதிலளித்த வியாசர், “கவலைப்படாதே தர்மா, சூரியனுக்காக எருக்க இலை சூடி விரதம் இருக்கும் ரத சப்தமி நாளில் பாரத தேசமே பீஷ்மருக்காக நீர்க்கடன் அளிக்கும்” என்று கூறினார்.
ரத சப்தமி நாளில் எருக்க இலைகளை வைத்துக் கொண்டு குளிக்கும் பக்தர்கள் தங்கள் பாவங்களில் இருந்து விடுவித்துக்கொள்வதோடு, பீஷ்மருக்கு நீர்க்கடன் அளித்த புண்ணியம் கிடைக்கும் என்று வியாசர் அருளினார்.
ரத சப்தமி நாளில் தஞ்சை மாவட்டம் சூரியனார் கோவில், திருமலை னிவாசப் பெருமாள் உள்பட பல ஆலயங்களில் திருவிழாவாக கொண்டாடப் படுகிறது. ஏழு மலைகளை ஏழு குதிரைகளாக பாவித்து, ரத சப்தமி விழா கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ஏழு வாகனங்களில் மலையப்ப சுவாமி மாட வீதிகளில் ஊர்வலமாகத் திருவீதி உலா வருவது கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும். ரங்கம் ரங்கநாதர் கோவிலிலும் ரத சப்தமி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

கல்வியில் சிறக்க ஸ்ரீலஷ்மி ஹயக்ரீவர் வழிபாடு

சென்னைக்கு அருகில் காட்டாங் கொளத்தூரை அடுத்துள்ள செட்டிப் புண்ணயத்தில் கோவில் கொண்டுள்ள அருள்மிகு தேவநாதசுவாமி திருக்கோயிலில்உள்ள ஸ்ரீயோக ஹயக்ரீவர் சன்னதியில் அர்ச்சித்து பூஜித்தால் கல்வியில் சிறந்து விளங்க முடியும் என இத்திருக்கோயில் தலபுராணம் தெரிவிக்கிறது. இந்த ஆலயத்தில் ஸ்ரீயோக ஹயக்ரீவர் வீற்றிருந்து மாணவ, மாணவிகளுக்கு கல்வி அருள் பாலித்து வருகிறார். ஆண்டுத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவதற்கும், தொடர்ந்து உயர்கல்வி பெறுவதற்கும் மாணவ, மாணவிகள் இத்தலத்துக்கு வந்து வழிபடுகிறார்கள்.
இத்தலத்துக்கு பலவித பணிகளால் வர இயலாதவர்கள் அருகில் உள்ள விஷ்ணு கோயிலில் உள்ள ஸ்ரீலஷ்மி ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை அணிவித்துப் பிரார்த்தனை செய்துகொள்ளலாம். பள்ளி, கல்லூரிகளில் இறுதித்தேர்வின்போது, மாணவர்களுக்கு ஏற்படும் பயத்தைப் போக்கவும், ஞாபக சக்தியை அதிகரிக்கவும், இப்பிரார்த்தனை பெரிதும் உதவுவதாகப் பயன் பெற்ற பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், அதிக மதிப்பெண்கள் பெறவும், ஒவ்வொரு ஆண்டும் செட்டிப் புண்ணியம் கோயிலில் வித்யா தோஷ நிவர்த்தி சங்கல்ப அர்ச்சனை பூஜையின்போது பேனா, பென்சில் வைத்து அர்ச்சனை செய்கின்றனர். பிறகு, பூஜையில் வைத்து அர்ச்சிக்கப்பட்ட ரட்சையை, முன்பதிவு செய்த மாணவர்களுக்கு கூரியரில் அனுப்பி வைக்கிறார்கள். அந்த ரட்சையைக் கையில் கட்டிக்கொண்டால், கல்வியில் மேன்மை உண்டாகும் என்பது நம்பிக்கை. 350 ஆண்டுகளுக்கு முன்பு பழமைவாய்ந்த புகழ் பெற்ற ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோவில் இங்கு நிர்மாணிக்கப்பட்டது. 

கடலூர் அருகே உள்ள திருவஹிந்திரபுரம் ஸ்ரீ தேவநாதனுடைய மற்றொரு அதி சுந்தரமான பிரயோக சக்கரத்துடன் சேவை தரும் திவ்யமங்கள விக்ரகத்தை எடுத்து வந்து செட்டிப்புண்ணியம் என்ற இவ்விடத்தில் எழுந்தருள வைத்தனர்.
இத்திருமூர்த்தியுடன் ஸ்ரீயோக ஹயக்ரீவரும் கொண்டுவரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.

மாசிமகம் தரும் மகத்தான வாழ்வு

பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குரு சிம்ம ராசியில் இருக்க, சூரியன் கும்பராசியில் இருக்க மாசி மாதத்தில் பௌர்ணமி தினம் அன்று மக நட்சத்திரம் கூடி இருப்பதான சேர்க்கை நடைபெறும். இந்தச் சேர்க்கை பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையே வரும். அன்றைய தினமே மகாமகம் என்று கொண்டாப்படுகிறது. ஆண்டு தோறும் வருவது மாசிமகம்.
மாசிமக தினத்தன்று ஈரேழு பதினான்கு லோகத்தில் வசிப்பவர்களும் இத்திருக்குளத்தில் நீராட வருவதாகவும், கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவிரி, கோதாவரி, சரயூ, பொருநை ஆகிய நதிகளும் கன்னிகளாக இங்கு வந்து இத்திருக்குளத்தில் நீராடித் தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்கின்றனர் என்றும் ஐதீகம். இந்த மகாமகக் குளம் சுமார் 20 ஏக்கர் பரப்புடையது. இந்நாளில் இங்கு வந்து தீர்த்தமாட இயலாதவர்கள், வீட்டில் நீராடும்பொழுது, புண்ணிய நதிகளும், ஏழு கடலும் இந்த நீரில் கலக்கட்டும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும். இந்த நன்னாளில் கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபடுதல் பல நன்மைகளைத் தரும். இச்சிறப்பினை புராணக் கதைகள் எடுத்து இயம்புகின்றன. 

இந்நாளில் இங்கு வந்து தீர்த்தமாட இயலாதவர்கள், வீட்டில் நீராடும்பொழுது, புண்ணிய நதிகளும், ஏழு கடலும் இந்த நீரில் கலக்கட்டும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும். இந்த நன்னாளில் கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபடுதல் பல நன்மைகளைத் தரும். இச்சிறப்பினை புராணக் கதைகள் எடுத்து இயம்புகின்றன.

தீர்த்தவாரிக்குச் சிறப்பு பெற்ற 108 திவ்யதேசங்களில் ஒன்று மகாபலிபுரம். இங்கு மாசி மகத்தன்று நீராடுவது ராமேஸ்வரத்தில் நீராடிய பலனைத் தரும்.

நல்ல வேலை கிடைக்க மயிலாப்பூர் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள்

படிப்புக்கேற்ற வேலை கிடைக்க வேண்டும் என்பது அனைவரது விருப்பம். அதே போல் நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்க வேண்டும் எனக் காத்திருப்பவர்களும் உண்டு. வெளிநாட்டில் வேலை பெற வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டவர்கள் ஏராளம். அவர்களுக்கான வரப்பிரசாதமாக அருளுபவர் மயிலாப்ப்பூர் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் ஆலயத்தில் உள்ள ஸ்ரீ மயூரவல்லித் தாயார் என்பது ஐதீகம்.
இவரை மனதார வேண்டிக் கொண்டு, சந்நிதியில் இரண்டு மணிகளைக் கட்டி விட்டு, தாயாருக்குத் தொடர்ந்து 48 நாட்கள் அல்லது வெள்ளிக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி 12 முறை பிராகாரத்தை வலம் வர வேண்டும். இங்கு வெள்ளிக்கிழமைகளில் மாலையில் தாயாருக்கு வில்வார்ச்சனை செய்யப்படுகிறது. இந்த அர்ச்சனையைச் செய்து பிரசாதத்தைப் பெற்று , பிரார்த்தித்துக் கொண்டால் நல்ல இடத்தில் வேலை கிடைக்கும் என்றும் தொழில் விருத்தியாகும் என்றும் கூறுகிறார்கள்.
இத்திருக் கோயிலில் ஸ்வாமியின் திருநாமம் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் தாயாரின் திருநாமம் ஸ்ரீ மயூரவல்லித் தாயார். மயூரபுரி என்ற மயிலாப்பூர், அருகில் உள்ள திருவல்லிக்கேணி துளசிவனமாக பிருந்தாரண்ய க்ஷேத்திரமாகவும் இருந்ததாம். இந்தத் தலத்தில் உள்ள கைரவணி தீர்த்தக் குளத்தில், ஆம்பல் மலராகத் தோன்றிய மகாலட்சுமித் தாயார், பிறகு முனிவரின் மகளாக அவதரித்து, பேயாழ்வாருக்கு அருள் புரிந்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம். மயூரபுரியில் அவதரித்ததால், ஸ்ரீமயூரவல்லித் தாயார் என்பது திருநாமம்.
இங்கு தாயார் விசேஷமாக அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். இந்தத் தாயாருக்குத்தான் சிறப்பாக இங்கு வெள்ளிக்கிழமைதோறும் மாலையில் வில்வார்ச்சனை செய்யப்படுகிறது. மேலும் ஒவ்வொரு வெள்ளியன்றும் காலையில் ஸ்ரீசுக்த ஹோமம் நடைபெறுகிறது.
திரேதா யுகத்தில் இத்தலத்தில் உள்ள கைரவணி புஷ்கரணிக் கரையில் ரிஷிகள் யாகம் நடத்தினர். மது என்ற அசுரன், யாகத்தினை நடத்தவிடாமல் குறுக்கீடுகளைச் செய்தான். இதனால் ரிஷிகள் யாகத்தைக் காத்து அதனை நிறைவேற்ற உதவும்படி பெருமாளை வேண்ட, அவர்களுக்குக் காட்சி தந்த பெருமாள் அசுரனை அழிப்பதாக உறுதியளித்து யாகத்தைத் தொடர்ந்து நடத்தும்படி கூறினார்.
அதன்படி ரிஷிகள் யாகத்தைத் தொடர எப்போதும் போல் அசுரனும் அங்கு வந்தான். அப்போது, மகாவிஷ்ணு யாகத்தில் இருந்து தோன்றி, அசுரனை அழித்தார். பின்பு ரிஷிகளின் வேண்டுகோளுக்கிணங்க இத்தலத்திலேயே தங்கிவிட்டார். ஆதியில் வந்து தங்கியதால் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் என்ற பெயரில் மஹாலட்சுமி தாயாருடன் இங்கு அருள் பாலிக்கிறார்.


Thursday, February 20, 2014

தேனி, தாடிச்சேரி.

திங்கள்கிழமையானால் திமிலோகப்படுகிறது தாடிச்சேரி கிராமத்தைத் தழுவி இருக்கும் நாகமலை. அன்றுதான் இங்குள்ள பெருமாள் கோயிலில் பேயோட்டும் கச்சேரி களைகட்டுகிறது.
தேனி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் எட்டுக் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது தாடிச்சேரி. ஒரு காலத்தில் கம்பும், சோளமும் காய்த்துக் குலுங்கிய இந்தக் கிராமத்து மண்ணில் இப்போது கரண்டு வெள்ளாமை (காற்றாலை மின் உற்பத்தி) கனஜோராய் நடக்கிறது. காலம் மாறிவிட்டது. ஆனால், மக்கள் இன்னும் பழமை மாறாமல் இருக்கிறார்கள். அவர்கள் நம்பிக்கைகளும் வாழ்க்கை முறைகளும் பெரிதாக மாறிவிடவில்லை. அதற்கு ஒரு அடையாளம்தான் இந்தப் பேயோட்டும் பெருமாள் கதையும். இந்த உரையாடலைக் கேளுங்கள்:
“மதியச் சாப்பாட்டுக்கு வீடு திரும்பிருவோமாக்கா..?”
“நேரமானா என்னாடி.. அங்கிய யாராச்சும் கறிச்சோறு ஆக்கிப் போடுவாக.. அதுல கொஞ்சம் அள்ளிப்போட்டுக்கலாம்டீ.”
“கரட்டுமேல ரொம்ப தொலை நடக்கணுமோ?”
“ரெண்டு மைலு போகணும்டி இவளே..”
பேச்சும் நடையுமாய் நாகமலையிலிருக்கும் கோயிலை நோக்கி சரளைப் பாதையில் சரசரவென நகர்கிறது பெண்கள் கூட்டம். அவர்கள் செல்வது பேயோட்டும் பெருமாள் கோயிலுக்கு.
“சட்டுப்புட்டுன்னு வைச்சு இறக்கிப் போடுங்கப்பே..” அன்றைய தினத்துக்கு கோயில் வாசலில் கோழிக்கறியும் சோறும் ஆக்கிப்போடும் உபயதாரர்கள், சமையல் ஆட்களை வேகப்படுத்தும் சத்தம் காதில் விழவும், “இந்தா வந்துருச்சுல்ல...” என்றபடி நடையை எட்டிப்போடுகிறது சனம்.
சரியாக மதியம் 12 மணி - பெருமாளுக்கு உச்சிக் காலப் பூஜை தொடங்குகிறது. சாம்பிராணிப் புகையின் மகிமையில் சும்மா இருப்பவர்களும் சாமியாடிவிடுவார்கள் போலிருக்கிறது. பயபக்தியுடன் பூஜையை முடித்துக்கொண்டு கருவறைக்கு வெளியே சந்நிதிக்கு எதிரே வந்து உட்காருகிறார் தங்கவேல் பூசாரி. அதற்கு முன்பாகவே நாலைந்து பெண்கள் சந்நிதிக்கு எதிரே வந்து பவ்யமாய் உட்கார்ந்துவிட்டார்கள். பூசாரியின் கையில் அதிரத் தயாராய் இருக்கிறது உடுக்கை. அவருக்குப் பக்கத்திலேயே கையில் ஒரு மினி டிரம்ஸுடன் வந்து அமர்ந்துகொண்டு தொண்டையைச் செருமுகிறார் லெட்சுமண பெருமாள்.
“நீ யாரா இருந்தாலும், எவரா இருந்தாலும், ஒரு வாழும் பொண்ணு வாழ்க்கையை கெடுக்கலாமா சண்டாளப் பாவிகளா?” தாளக்கட்டு மாறாமல் பாடுகிறார் லெட்சுமண பெருமாள். கை டிரம்ஸில் விளையாடுகிறது. அவருக்குப் பக்கவாத்தியமாகத் தங்கவேல் பூசாரியின் உடுக்கையும் உறுமுகிறது. எதிரே உட்கார்ந்திருக்கும் பெண்களில் ஒருவர் மட்டும் வித்தியாசமாக உடம்பை முறிக்கிறார்.
“வந்துட்டியா பாண்டி..” கூடப் படிக்கும் தோழனை அழைப்பதுபோல் அந்நியோன்யமாய் அழைக்கிறார் பூசாரி. மேற்கொண்டு தொடர்வதற்கு முன்பாகக் கொஞ்சம் பின்கதை.
எதிரே முறுக்கிக்கொண்டு இருக்கும் பெண்ணின் பெயர் ராமாத்தா. திருப்பூருக்குப் பிழைக்கப் போனவர். அங்கே இவர் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் குடும்பத்தோடு வசித்த குடிகாரன்தான் பாண்டி. குடிப்பதற்குக் காசு தரவில்லை என்பதற்காக விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டாராம் பாண்டி. அவருடைய ஆவிதான் இப்போது ராமாத்தாவுக்குள் வந்திருக்கிறதாம். கடந்த வாரம் இங்கே வந்தபோது, ராமாத்தாவுக்குள் இருந்த பாண்டியே இத்தனையும் சொல்லிவிட்டாராம்.
“ஆனது ஆகிப்போச்சப்பா... அது வாழ வேண்டிய புள்ள. ஒனக்கு வேணுங்கிறத கேட்டு வாங்கிட்டு, மூணு வாரமோ அஞ்சு வாரமோ வந்து சந்தோஷமா ஆடிட்டுப் போயிரு”
“அப்டினா.. எனக்கு குவாட்டர் பிராந்தியும் பஞ்சு வைச்ச சீரெட்டும் வாங்கிக் குடுப்பா. மூணு வாரம் மட்டும் ஆடிட்டுப் போயிடுறேன்”
திருவாளர் பாண்டிக்கும் தங்கவேலு பூசாரிக்கும் இடையில் கடந்த வாரம் ஏற்பட்ட எழுதப்படாத ஒப்பந்தம் இது. கேட்டதை வாங்கிக்கொள்ளத்தான் இப்போது ராமாத்தாவுக்குள் இருந்து வாய்ஸ் கொடுக்கிறாராம் பாண்டி.
“இந்தாப்பே ஏய்.. நீ கேட்ட பிராந்தி...” பூசாரி எடுத்து நீட்ட, மொடாக் குடிகாரன் கணக்காய் குவாட்டரின் கழுத்தை திருகி, அப்படியே உள்ளே தள்ளுகிறார் ராமாத்தா. மன்னிக்கணும் பாண்டி! “டேய்.. அளவா குடிடா. பச்சப்புள்ள ஒடம்பு தாங்காது...” பூசாரியின் கெஞ்சல் எதுவும் பாண்டி காதில் ஏறியதாகத் தெரியவில்லை. “அவளா குடிக்கிறா? உள்ளார இருக்கிற பாண்டில்ல குடிக்கிறான்?” தள்ளி இருக்கும் பெண்கள் தங்களுக்குள் கிசுகிசுக்கிறார்கள். “சும்மா.. நொச்சு.. நொச்சுன்னு பேசாதீங்கம்மா” என்று தாய்குலத்தை அதட்டிவிட்டுப் பாண்டி பக்கம் திரும்புகிறார் பூசாரி.
“ஏலேய் பாண்டி, நீ கேட்டத குடுத்தாச்சப்பா...” பூசாரி சொல்லி முடிப்பதற்குள் குறுக்கிட்டார் பாண்டி. “பஞ்சு வைச்ச சீரெட்டு?”
பக்கத்தில் இருந்தவர்கள் மஞ்சள் பைக்குள் இருந்து ஃபில்டர் சிகரெட்டை எடுத்துக் கொடுக்க, “தீப்பட்டி யாரு குடுப்பாவாம்?” கிசும்பாய்க் கேட்டார் பாண்டி. கூட்டத்தில் இருந்து யாரோ தீப்பட்டியை எடுத்து வீச, கச்சிதமாய் அதைக் கேட்ச் பிடித்த ராமாத்தாள், அதே வேகத்தில் சிகரெட்டைப் பற்றவைத்து ஆனந்தமாய் ஊதித் தள்ளினார். அதுவரை பொறுமை காத்த பூசாரி, எல்லாவற்றுக்கும் சேர்த்து ஒரு பிடி பிடிக்கக் கிளம்பினார்.
“சரிப்பா.. நாங்க சொன்னபடி நடந்துக்கிட்டோம். நீயும் அதே மாதிரி நடந்துக்கணும். இன்னும் ஒரு வாரம் ஒனக்கு பாக்கி இருக்கு. அடுத்த வாரமும் வந்து ஆடிட்டு சந்தோஷமா(!) இந்தப் புள்ளைய விட்டுட்டுப் போயிடணும்.”
பூசாரியின் கட்டளைக்கு மூச்சே விடவில்லை பாண்டி. “என்னடா.. பேச்சக் காணோம்... சொன்னபடி நடந்துக்கிறியா... இல்ல, தரையை நூறு தடவ நக்கவிடவா?” பூசாரி மிரட்டியதும் பாண்டி கிளம்பிவிட்டார் (ராமாத்தாள் மயங்கி விழுந்துட்டாங்கன்னா அதுதானே அர்த்தம்!).
சற்று நேரத்தில் முகத்தில் தண்ணீர் அடித்து ராமாத்தாளை எழுப்புகிறார்கள். “பயப்படாதம்மா... அடுத்த வாரத்தோட அந்தப் பய ஓடிப் போயிருவான்” என்று சமாதானப்படுத்தும் பூசாரி, கை நிறைய திருநீறை அள்ளி ராமாத்தாளின் கையில் திணிக்கிறார். அழுக்கான மூன்று பத்து ரூபாய் நோட்டுக்களைத் தட்டில் போட்டுவிட்டுச் சாதுவாய்க் கிளம்புகிறார் ராமாத்தாள். ஒரு குவாட்டரை மிக்ஸிங் ஏதும் இல்லாமல் உள்ளே தள்ளியதற்கான சிறு தள்ளாட்டம்கூட இல்லாமல் அவர் நடந்து செல்கிறார்.
தமிழகத்தின் பல ஊர்களிலிருந்தும் இப்படிப் பல வித்தியாசமான முகங்கள் நாகமலைக்குத் திங்கள் தவறாமல் வந்து போகின்றன. இங்கு வந்து போனால் பேய், பிசாசு, பில்லி, சூனியம் அத்தனையும் அறுத்துக்கொண்டு ஓடிவிடும் என்பது இந்த மக்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கை பொய்க்காமல் குணமடைந்தவர்கள், அடுத்த வாரமே இங்கு வந்து கறிச் சோறாக்கிப் போட்டுக் கடனை நேர் செய்கிறார்கள். பேய், பிசாசு இதெல்லாம் பிதற்றல் என்று அறிவியல் மட்டுமல்ல, சாதாரண மக்களில்கூடப் பலரும் திட்டவட்டமாகச் சொல்கிறார்கள். எல்லாம் மனப் பிராந்தி என்று சொல்வார்கள். ஆனால் ராமாத்தாள் உருவில் வந்து நிஜப் பிராந்தி குடிக்கும் பாண்டிகளைத்தான் நாகமலைக்கு வரும் மக்களுக்குத் தெரியும். இதுதான் அவர்கள் கண்கண்ட உண்மை. அவர்கள் நம்பிக்கை.

அலங்காரச் செடிகள்


பீஸ் லில்லி:
வீட்டில் அழகான செடி வளர்க்க ஆசைப்படுபவர்களின் சாய்ஸ் இதுதான். பீஸ் லில்லியை வீட்டில் வளர்த்தால் வீடு அழகாகக் காட்சியளிப்பதோடு சுத்தமாக இருப்பது போன்ற உணர்வையும் ஏற்படுத்தும்.
மார்ஜினட்டா:
மிகவும் அழகான அலங்காரச் செடிகளில் ஒன்று மார்ஜினட்டா. நீளமான புற்கள் போல வளரும் இந்தச் செடி வீட்டுக்குள் இருந்தால் தூசி எளிதில் அண்டாது என நம்பப்படுகிறது.
ஸ்னேக் பிளாண்ட்:
உள் அலங்காரத்திற்கு ஏற்ற செடிகளுள் ஸ்னேக் பிளாண்ட் முக்கியமானது. இந்தச் செடியை வீட்டுக்குள்ளேயும், வெளியேயும் வைக்கலாம். இந்தச் செடி வீட்டுக்குள் இருந்தால் அழகு கூடும்.
கற்றாழை:
பெரும்பாலான வீடுகளின் முற்றத்தில் தொங்கவிடப்படும் அலங்காரச் செடி கற்றாழை. மருத்துவ குணம் உள்ள இந்தச் செடியை ஆர்வமாகப் பலரும் வளர்ப்பதைப் பார்க்க முடிகிறது. இந்தச் செடி வீட்டில் உள்ள நச்சுகளை உள்வாங்கிக் கொள்ளும் குணம் இருப்பதாக நம்பப்படுகிறது.
கமுகு மரம்:
இந்தச் செடியின் இலைகள் பார்ப்பதற்குத் தென்னை மரத்தின் இலைகளைப் போன்று காணப்படும். பார்ப்பதற்கு வித்தியாசமாகவும் அழகாகவும் காட்சியளிக்கும் இந்தச் செடி வீட்டுக்குள் இருந்தால், குளிர்ச்சியான காற்று வீசுவது போன்ற உணர்வு ஏற்படும்.
ஐவி:
மணி பிளாண்ட் போல இதுவும் ஒருவகையான படர்கொடி. வீட்டில் வளர்க்கக்கூடிய உள் அலங்காரச் செடிகளில் மிகவும் பிரபலமானது. செடி சுவரில் படர்ந்து வளர்வது பார்ப்பதற்கே அழகாக இருக்கும்.
ஃபேர்ன்ஸ்:
கோழி இறகுகள் போலக் காணப்படும் இந்தச் செடியின் இலைகள் மிகவும் வித்தியாசமாக இருக்கும். பாஸ்டன் ஃபேர்ன் செடி, வீட்டில் ஈரப்பதத்தை வெளியேற்றும் தன்மை கொண்டதாகக் கருதப்படுகிறது. வீட்டுக்குள்ளேயும் வெளியேயும் வைத்து இந்தச் செடிகளைப் பராமரிக்கலாம்.
வீட்டை அலங்கரிக்க இந்தச் செடிகள் சில சாம்பிள்கள் மட்டுமே. இவை போல இன்னும் ஏராளமான செடிகள் வீட்டை அலங்கரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.