Sunday, November 16, 2014

பேசாதவரை பேசவைக்கும் பெருமாள்

தொன்மைச் சிறப்புள்ள தொண்டை மண்டல நாட்டில் பஞ்ச பூதத்தலங்களில் ஒன்றான திருத்தலம் திருவண்ணாமலை. அண்ணாமலையார் ஆலயம் அமைந்துள்ள அந்த மாவட்டத்தின் எல்லைக்குள் அமைந்திருக்கும் ஆரணி வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூரிலிருக்கும் குன்றின் மேல் அமைந்துள்ள கோவிலுக்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து சுவாமியைத் தரிசிக்கிறார்கள்.
ஆலய அமைவிடம் : சுமார் 2 ஆயிரம் அடி உயரமுள்ள அந்தச் சிறு குன்று ஐயம்பாளையம் என்ற கிராமத்திலுள்ளது. அக்குன்றில் அமைந்துள்ள ஆலயத்திற்கு அகலமான, உயரமில்லா 340 படிக்கட்டுகளைக் கடந்து செல்ல வேண்டும். கார்களில் பயணம் செய்ய வசதியாக மலைப்பாதையும் உள்ளது.

14-&ஆம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்களால் அந்தக் கோவில் கட்டப்பட்டது. திருவண்ணாமலையிலிருந்து வேலூர் செல்லும் வழியில் சுமார் 40 கி.மீ. தொலைவில் ஒரு பிரிவுச்சாலை உள்ளது. அச்சாலையிலிருந்து 3 கி.மீ. பயணிக்க வேண்டும். இக்கோவிலுக்கு வேலூரிலிருந்து வர நகரப் பேருந்து வசதியுள்ளது.

சென்னை, மதுரை, விருதுநகர், நெல்லை, திருப்பூர், குமரி மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் அங்கு வந்துள்ளனர் என்பதை அவர்கள் அமைத்துக் கொடுத்த படிக்கட்டுகளிலிருந்து அறிய முடிகிறது. ஆந்திர, கர்நாடக மாநிலத்தவர்களும் வந்து வழிபடுகின்றனர்.

நன்றாகப் பேச வராத குழந்தைகள், சற்று வயதானவர்கள், இருபது வயதைக் கடந்தவர்கள், திக்கிப் பேசுபவர்கள் இந்தக் கோவிலுக்கு வந்து வணங்கினால் அவர்களால் நன்கு பேச முடிகிறது, பேச முடியும் என்ற நம்பிக்கை அங்கு உறுதி பெறுகிறது. மூன்று முறை, மூன்று மாத இடைவெளியில் அந்த ஆலயத்திற்கு வருகிறார்கள். பேச முடியாதவர்களையும் பேசவைக்கும் அந்த ஆண்டவனின் பெயர் ஊமைக்கு வாய் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

சனிக்கிழமை காலை 7 மணி அளவில் பெருமாளுக்குத் தேனபிஷேகம் நடைபெறுகிறது. அந்த அபிஷேகத்தேனை ஒரு பாத்திரத்தில் பிடித்து வைத்துக் கொள்கிறார்கள். பின்னர் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்படுகிறது.

பக்தர்கள் தங்களுடன் அழைத்து வந்த குழந்தைகள் மூன்று வயதுக்குக் குறைவானவர்களாக இருந்தால் அவர்களை அர்ச்சகர் அந்தப் பெருமாளின் பாதங்களில் வைத்து வணங்குகிறார். மற்றவர்கள் கர்ப்பக்கிரகத்திற்கு வெளியே இருக்க வேண்டும். மூலவரை மிக அருகிலிருந்து தரிசிக்கலாம். பின்னர் அவர்கள் கோவிலின் மண்டபத்தில் அமர வேண்டும். அர்ச்சகர் அபிஷேகத் தேனை ஒரு சிறு கரண்டியில் எடுத்துக் குழந்தையின் நாக்கில் ஓம் நமோ நாராயணா என்று உச்சரித்துத் தடவுகிறார். ஒரு சிறு பாட்டிலில் அந்தத் தேனை அவர்களிடம் கொடுத்தும் விடுகிறார்.

நாள்தோறும் காலையில் அந்தக் குழந்தையைக் குளிப்பாட்டி, நாவில் அத்தேனைத் தடவ வேண்டும். மூன்று மாத இடைவெளியில் மூன்று முறை அங்கு வந்தால் பலன் நிச்சயம் என்று அர்ச்சகர் கூறுகிறார். அப்படிப் பலன் பெற்றவர்களும் அங்கு நூற்றுக்கணக்கில் வருகிறார்கள். மலை அடிவாரத்தில் ஆழ்துளைக்கிணறு ஒன்றை அமைத்து, தண்ணீர் வசதி செய்திருக்கிறார்கள்.

ஊமையைப் பேச வைத்தல் : சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் அந்த ஆலயம் அமைந்துள்ள குன்றில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான். அவன் வாய் பேசாத ஊமை. ஆடுகளை மேய விட்டுவிட்டு அந்த ஆலய நுழை வாயிலில் அவன் அமர்ந்து கொண்டிருந்தபோது, கருவறையில் இருக்கும் பெருமாள் அவனை அருகில் அழைத்து உன் பெயர் என்ன? என்று கேட்டாராம். அவன் ஏதும் பேசாமல் ஆ, ஊ என்று ஒலியெழுப்பினான். உடனே பெருமாள் அவனிடம் உன் பெயர் பெருமாள். உனக்குத் தெரியாதா? என்று கேட்டாராம்.

உடனே அவன் பே, பே என்று கூறினானாம். உடனே அவனைப் பார்த்து, பெருமாள், பெருமாள், பெருமாள்! என்று மூன்று முறை கூறினாராம். அவன் மெல்ல, மெல்ல முயற்சி செய்து பெருமாள், பெருமாள் என்று கூறிக்கொண்டு மலையடிவாரத்திற்கு வேகமாக ஓடிவந்து அங்கிருந்தவர்களிடம் பெருமாள், பெருமாள் என்று பலமுறைக் கூறி அந்தக் குன்றிலுள்ள கோவிலைக் காட்டினானாம்.

பிறந்து சில ஆண்டுகளாகப் பேசாமல் ஊமையாக இருந்தவன் திடீரென்று பேசியதால் அப்பகுதி மக்கள் ஆச்சரியமடைந்து அந்தக் கோவிலுக்கு அதிக அளவில் வர ஆரம்பித்தார்களாம். தங்கள் குழந்தைகளை அந்தக் கோவிலுக்கு அழைத்து வந்து பலர் பலன் பெற்றிருக்கிறார்களாம். நெல்லை மற்றும் குமரி மாவட்டத்திலிருந்து பக்தர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்திருந்ததைக் கண்டபோது உத்தமராயப் பெருமாளின் அற்புத ஆற்றல் அளவிட முடியாதது என்பதை உணர முடிந்தது.

கோவிலின் தோற்றம் : சதுர வடிவமான கருவறையில் பெருமாள் ஏகாந்தமாக அழகிய திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். கருவறையைச் சுற்றியுள்ள புறச் சுவர்கள் சிற்ப வேலைப்பாடுகள் ஏதுமின்றியுள்ளன. அர்த்த மண்டபத்தில் உள்ள தூண்களில் திருமால், அனுமன், சங்கு, சக்கரம், ராமானுஜர், அன்னம், பறவை, பெரியாழ்வார் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கருவறையின் மேலுள்ள கோபுரத்துள் நான்கு மூலைகளிலும் கருட பகவான் காட்சியளிக்கிறார்.

விழாக்கள் : ஒவ்வொரு நாளும் காலையில் 9 மணிவரை கோவில் திறந்திருக்கும். ஆனால், சனிக்கிழமை காலை 6 மணிக்குத் திறக்கப்பட்டு, மாலை 7 மணிவரை திறந்திருக்கும். அன்று பெருமாளுக்குத் தேனபிஷேகம் செய்தபிறகு அலங்காரம் செய்யப்படும். பக்தர்களின் வருகையும் அதிகமாக இருக்கும்.

புரட்டாசித் திங்களில் நவராத்திரி நாட்களிலும், கார்த்திகைத் திங்கள் விஷ்ணு கார்த்திகை நாளன்றும், தைத்திங்களில் காணும் பொங்கலுக்கு அடுத்த நாளும் விழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன.

கிழக்கே உள்ள நுழைவு வாயிலுக்கு எதிரே கிழக்குத் திசையில் உள்ள ஒரு குன்றின் அமைப்பு நந்தி ஒன்று இருப்பது போலக் காட்சியளிக்கிறது. அந்த நந்தி திருவண்ணாமலையை நோக்கி அண்ணாமலையாருக்கு நந்தி வாகனம் போலத் தோற்றமளிக்கிறது. அதே நேரத்தில் அந்த ஆட்டிடையனை நினைவு படுத்துவது போல ஓர் ஆடு அமர்ந்திருப்பது போலவும் தோற்றமளிக்கிறது.

ஐயம்பாளையத்திலிருந்து தெற்கே வேலூர் – திருவண்ணாமலை சாலையில் சந்தவாசல் என்ற ஊருக்கு மேற்கே 6 கி.மீ. தொலைவில் உள்ள படவேடு அருள்மிகு ரேணுகாம்பாள் கோவில் நிர்வாகக் கட்டுப்பாட்டில் இந்த உத்தமராயர் கோவில் செயல்படுகிறது.

உத்தமராயர் கோவிலுக்குச் செல்பவர்கள் அங்கிருந்து 15 கி. மீ. தொலைவில் உள்ள மிகப்பெரிய பழமையான அம்மன் கோவிலான ரேணுகாம்பாள் கோவிலுக்குச் சென்று அந்த அம்மனையும் வழிபட்டு வரலாம்.
இருப்பிடம்: வேலூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் வழியில் 23 கி.மீ., தூரத்தில்கண்ணமங்கலம் உள்ளது. இங்கு இறங்கி 6 கி.மீ., ஆட்டோவில் சென்றால் கோயிலை அடையலாம்.
திறக்கும் நேரம்: சனிக்கிழமைகளில் காலை 7.30 - இரவு 7 மணி வரை. மற்ற நாட்களில் காலை 7- 8 மணி. முன்கூட்டியே போனில் தொடர்பு கொண்டால், மற்ற வேளைகளிலும் சுவாமியைத் தரிசிக்கலாம்.
போன்: 04181- 248 224, 248 424, 93455 24079.
Yoga for hearing gain : http://www.maharishipathanjali.com/2011/04/blog-post_23.html 


 http://pulivahanan.wikifoundry.com/photo/10798362/thread/4250142/;jsessionid=A9EBCF9144663C0152136F18BE550DC8?offset=0&maxResults=10

No comments:

Post a Comment