Saturday, November 22, 2014

நண்பர்கள் காதலுக்கு உதவலாமா?

நானும் என் தோழியும் பள்ளி, கல்லூரியில் ஒன்றாகப் படித்தோம். இப்போது என் தோழி வேலை செய்துவருகிறாள். கல்லூரி இறுதியாண்டு படிக்கும்போது என் தோழி ஒருவரைக் காதலித்தாள். அவர் எனக்கும் நல்ல நண்பர். அவர்கள் காதலுக்குத் தொடர்ந்து நான் உதவிவந்தேன். இப்போது அவர்கள் இருவருக்கும் பிரச்சினை. அதனால் பேசிக்கொள்வதில்லை. இருவரும் ஆரம்பத்திலிருந்தே அவர்கள் காதலில் வரும் பிரச்சினையை என்னிடம்தான் பகிர்ந்துகொள்வார்கள். இப்போது அவர்கள் இருவரும் பிரிந்துவிடுவார்கள்போல் தெரிகிறது. இது என்னைப் பாதிக்கிறது. நான் என்ன செய்ய வேண்டும்?
ஒரு விஷயத்தைச் சரியாகப் புரிந்துகொள்வதற்குத் தக்க இடைவெளி தேவை. இடைவெளி என்பதே இல்லாமல் அவர்கள் உறவில் நீங்கள் பங்குகொள்ளும்போது, உங்கள் கண்ணோட்டம் தவறாகப் போகிறது. உள்ளதை உள்ளபடி உங்களால் பார்க்க முடிவதில்லை.
தோழி என்னும் உறவின் வரையறைகளை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அவர்களின் பிரிவு உங்களுக்கு வருத்தத்தைத் தரலாம். அது நியாயமானதுதான். ஆனால் அதனால் நீங்கள் பாதிக்கப்படுவது என்பது சரியல்ல. அது அவர்களின் வாழ்க்கை. இதை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை என்றால் உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழாமல் அவர்களின் வாழ்க்கையுடன் ஒன்றிப் போய்விடும் ஆபத்து இருக்கிறது. இது உங்களை வேதனைக்கு இட்டுச் சென்றுவிட முடியும். அவர்களின் முடிவு எதுவானாலும் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் சொந்த அனுபவத்திலிருந்துதான் நீங்கள் வாழ்க்கை பற்றிக் கற்றுக்கொள்ள முடியும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
உளவியல் ஆலோசகர் ஆனந்த் கிருஷ்ணாவுடன் உரையாடலாம். உங்கள் கேள்விகள், எண்ணங்கள், குழப்பங்கள், உறவுச் சிக்கல்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். முகவரி: இளமை புதுமை, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை-600 002. மின்னஞ்சல்: ilamaiputhumai@thehindutamil.co.in

No comments:

Post a Comment