அண்மையில் வெளியிடப்பட்ட உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் ரூ.4,08,000 கோடி சொத்து மதிப்புடன் அமெரிக்காவைச் சேர்ந்த மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அதே நாட்டைச் சேர்ந்த வாரன் பப்பட் ரூ.3,84,000 கோடி சொத்துகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
பெர்க்ஷையர் ஹாத்வே குழுமத்தின் தலைமை செயல் அதிகாரியான வாரன் பப்பட்டுக்கு தற்போது 84 வயதாகிறது. முதுமை காரணமாக அவர் தலைமைப் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளார். அவருக்கு அடுத்ததாக பெர்க்ஷையர் ஹாத்வே தலைமை செயல் அதிகாரியாக யாரை நியமிப்பது என்பது குறித்து தற்போது தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த வரிசையில் அஜித் ஜெயினின் பெயரை வாரன் பப்பட் உட்பட பெர்க்ஷையர் ஹாத்வே குழும நிர்வாகிகள் பலரும் பரிந்துரை செய்துள்ளனர். ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த அவர் தற்போது பெர்க்ஷையர் ஹாத்வே குழுமத்தின் ரீ- இன்ஷுரன்ஸ் பிரிவு தலைவராக உள்ளார்.
ஏற்கெனவே மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இந்திய வம்சா வளியைச் சேர்ந்த சத்யா நாதெள்ளா உள்ளார். கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகிகளில் ஒருவராக சென்னையைச் சேர்ந்த சுந்தர் பிச்சை செயல்படுகிறார். அமெரிக்காவின் லூசியானா ஆளுநராக பதவி வகிக்கும் இந்தியர் பாபி ஜின்டால், குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.