Tuesday, October 28, 2014

வீடு வாங்கும் யோகம் கூடிவரும்


சென்னை அருகே உள்ள புதுப்பாக்கத்தில் வீர ஆஞ்சநேயர் கோவில் இருக்கிறது. இந்த தலத்தில் உள்ள மலையை சுற்றி ஆஞ்சநேயர் கிரிவலம் வருவதாக ஐதீகம் கூறப்படுகிறது.

பாதம்பட்ட திருத்தலம் :

அவ்வாறு வந்து கொண்டிருந்தபோது மாலை வேளையானது. அதனால் நித்திய கர்மாவாகிய, சந்தியா வந்தனம் செய்வதற்காக ஆஞ்சநேயர் ஓரிடத்தில் இறங்கினார். தன் வழிபாடு முடிந்ததும் ஆஞ்சநேயர் புறப்பட்டு சென்று விட்டார்.

வீர ஆஞ்சநேயர் கோவில் :

மலையடிவாரத்தில் உள்ள விநாயகர் சன்னிதியை வழிபட்டு, அதன் பக்கவாட்டில் உள்ள நவக்கிரக சன்னிதியையும் தரிசித்து விட்டு கஜகிரி என்னும் மலையை ஏறிச் செல்ல வேண்டும். அவ்வாறு சென்றால் மலை உச்சியில் வீர ஆஞ்சநேயர் அருள்பாலிக்கும் அழகை தரிசனம் செய்யலாம். இந்த ஆஞ்சநேயர் சாளக்கிராமத்தால் ஆனவர்.

எதிரில் சீதாதேவி, லட்சுமணன் சமேதராக ராமபிரான் ஒளிர்கிறார். ராமபிரானின் திருவடிக்கு அருகிலும் அனுமன் உள்ளார். வீர ஆஞ்சநேயரின் வலது திருப்பாதம் தரையில் ஊன்றி, இடது திருப்பாதம் உயர்த்தி தரையில் படாமல், பறப்பதற்குத் தயாராக இருப்பதுபோல் அமைந்துள்ளது. அவரது நாபிக் கமலத்தில் தாமரையும், வாலில் மணியுடன் தலைக்கு மேல் வால் தூக்கப்பட்ட நிலையில் பக்தர்களுக்கு அபயம் தந்து அருள்கிறார்.

108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவிடந்தை ஆதிவராக சுவாமி (நித்திய கல்யாணப் பெருமாள்) தலத்தின் 'பரிவேட்டை' தலமாகவும் இத்தலம் உள்ளது குறிப்பிடத்தக்கது. வீரஆஞ்ச நேயர் திருத்தலத்தில் பக்தர்களுக்கு வலம்புரிச் சங்கில் தீர்த்தம் கொடுப்பது தனிச்சிறப்பாகும். பவுர்ணமி தோறும் இரவு நேரத்தில், ஆஞ்சநேயர் இந்த கஜகிரிமலையை கிரிவலம் செய்வதாக ஐதீகம்.

அப்போது பக்தர்களும் கிரிவலம் வந்தால் நாம் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. அமாவாசை நாளில் புதுச் செங்கலில் ராமநாமம் எழுதி, அதனை தலையில் வைத்து படியேறி வந்து ஆஞ்ச நேயரை வழிபட்டால் வெகுவிரைவில் வீடு வாங்கும் யோகம் கூடிவரும் என்று கூறப்படுகிறது.

மூல நட்சத்திர நாட்களில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை, வடை மாலை சாத்தி வழிபட்டால் காரிய தடைகள், திருமணத் தடைகள் அகலும். வேலைவாய்ப்பு கிட்டவும், உயர் பதவி கிடைக்கவும், செவ்வாய்க்கிழமை மாலை வேளைகளில் வெண்ணெய் சாத்தி, அருகம்புல்லுடன் வெற்றிலை வைத்துக் கட்டிய மாலையை ஆஞ்சநேயருக்கு சூட்டி வழிபட வேண்டும்.

இந்த திருத்தலத்தில் ஆண்டுதோறும் அனுமன் ஜெயந்தியும், ராமன் நவமியும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பவுர்ணமி கிரிவலமும் சிறப்பாக நடக்கிறது. இந்த ஆலயத்தில் அருகிலேயே திருவெளிச்சை சிவன் கோவிலும், மாம்பாக்கம் தெய்வநாயகி சமேத முருகநாதீஸ்வரர் கோவிலும் உள்ளன.

சென்னை அடுத்த வண்டலூரில் இருந்து கேளம்பாக்கம் செல்லும் வழியில் 12 கிலோமீட்டர் தூரத்திலும், கேளம்பாக்கத்தில் இருந்து வண்டலூர் மிருக காட்சி செல்லும் சாலையில் 5 கிலோமீட்டர் தூரத்திலும் புதுப்பாக்கம் மலை ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது.

 காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.vandalor kelambakkam route

No comments:

Post a Comment