Friday, February 20, 2015

நலம் தரும் நல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர்






திருநல்லுர் ஸ்ரீ கிரிசுந்தராம்பாள் சமேத ஸ்ரீ கல்யாணசுந்தரேஸ்வரர்
சமயக் குரவர்கள் பாடிய தலம்
பன்னிரு திருமுறையில் கிட்டத்தட்ட அனைத்திலும் பாடல் பெற்ற தலமாக இந்நல்லூர் விளங்குகிறது. அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், அருணகிரி நாதர், சேக்கிழார் ஆகியோர் இத்திருத்தலம் குறித்துப் பாடியுள்ளனர்.
மகம் பிறந்தது நல்லூரில், மகாமகம் பிறந்தது கும்பகோணத்தில் என்ற வழக்கு உண்டு. கும்பகோண மகாமகக் குளத்தில் நீராடுவதால் என்ன புண்ணியம் கிட்டுமோ அதே புண்ணியம் நல்லூரிலுள்ள திருக்குளத்தில் மகத்தன்று நீராடினாலும் கிடைக்கும் என்கிறது தல புராணம்.
இத்திருக்கோயிலில் மாசி மாத உற்சவம் இவ்வாண்டு 23.02.15 திங்கட் கிழமையன்று தொடங்கி 06.03.15 வெள்ளிக்கிழமையன்று நிறைவுறுகிறது. திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனம் 24- வது குரு மகாசந்நிதானம் ஸ்ரீ லஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் திருவுளப்படி இவ்விழா நடைபெற உள்ளது.
சப்த சாகரம்
திருமாலுடன் நடந்த போட்டியில் சிவபிரானது முடியைக் கண்டேன் என்று பிரம்மதேவன் பொய்யுரைத்தார். அதனால் உண்டான தீவினையைப் போக்கிக்கொள்ள, இந்தச் சுந்தரகிரிக்கு முன்னால் தன் பெயரால் பொய்கை ஒன்றை நிறுவி நீராடிப் பெருமானைப் பூசித்துப் பேறு பெற்றார்.
பிரம்மன் நீராடிய இந்த இடம் பிரம்ம தீர்த்தம் எனக் குறிப்பிடப்படுகிறது. இது பின்னர் சப்தசாகரம் அதாவது ஏழு கடல் எனப் பெயர் பெற்றது. இத்தலத்தின் தல விருட்சம் வில்வ மரம். 

ஐவகை நிறத்துடன் தோன்றுவதால் பஞ்சவர்ணேசுவரர் என இங்குள்ள சிவனுக்குத் திருநாமம். அமர் நீதியார், அப்பர் ஆகியோரை ஆட்கொண்டமையால் ஆண்டார் என்பது மற்றொரு திருநாமம்.
அகத்தியருக்குத் தம் திருமணக் கோலத்தைக் காட்டி அருளியமையால் கலியாண சுந்தரர் என்பதும் இவரது திருநாமம். பேரழகு கொண்டவரானதால் சுந்தரநாதன், சவுந்தரநாயகர் எனவும் பெயர் கொண்டு விளங்குகிறார்.
அகத்தியருக்குத் தன் திருமணக் காட்சியைக் காட்டிய சிவபெருமானின் கோலத்தை இன்றும் மூல லிங்கத்தின் பின் கருவறையில் காணலாம். அந்தக் கருவறை ஈசனின் பெயர் கல்யாண சுந்தரேஸ்வரர், அம்பிகையின் பெயர் கிரிசுந்தரி.
சிவாலயங்களில் பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்ற இறைவன், இறைவியின் திருக்கல்யாணத்தை நடத்துவார்கள். ஆனால் இறைவனோ தானே மனமுவந்து இங்கேயே திருக்கல்யாணக் காட்சியைக் காணச் செய்ததால், இந்தத் திருத்தலத்து ஈச்னை இருந்த இடத்தில் இருந்தே பக்தர்கள் வேண்டிக்கொண்டால், அவரவர் இல்லத்தில் திருமணம் கை கூடும் என்பது நம்பிக்கை.

No comments:

Post a Comment