Friday, July 21, 2017

மிளகு பிள்ளையார் திருக்கோவில், சேரன்மகாதேவி

❂ விவசாயங்களை காத்து அருளும் அருள்மிகு மிளகு பிள்ளையார் திருக்கோவில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேரன்மகாதேவி எனும் ஊரில் அமைந்துள்ளது.

மூலவர் : மிளகு பிள்ளையார்/Pepper Ganesh

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்.

ஊர் : சேரன்மகாதேவி/ Cheranmahadevi

மாவட்டம் : திருநெல்வேலி/Thirunelveli

தல வரலாறு :

❂ கேரள மன்னர் ஒருவர் தீராத வியாதியால் அவதிப்பட்டு கொண்டிருந்தார். இதை அறிந்த கர்நாடக பிராமண இளைஞன் ஒருவன் மன்னர் உயரமுள்ள மாணிக்கக்கற்கள் நிறைந்த சிலையை பெற்றுக் கொண்டார்.

❂ பொம்மை கைமாறியதும் உயிர் பெற்றது. வியாதி உன்னை அண்டாமலிருக்க காயத்ரியின் பலனில் ஒரு பகுதியைக் கேட்டது. பிரம்மச்சாரியும் கொடுத்து விட்டான். கொடுத்த பிறகு, அவனது மனது கஷ்டப்பட்டது.

❂ தர்மத்துக்கு மாறாக காயத்ரியின் பலனை தானம் செய்து விட்டோமே என கலங்கினான். இதற்கு பிராயச்சித்தம் செய்ய எண்ணி பொதிகையில் வசித்த அகத்தியரிடம் யோசனை கேட்க முடிவு செய்தான். பல இடையூறுகளுக்கு பின் அகத்தியரை சந்தித்த போது, அவன் கேட்டதைத் தருவதாகச் சொன்னார் அகத்தியர். கன்னடன் விஷயத்தைச் சொன்னான்.

❂ அகத்தியர் அவனிடம் தண்ணீர் தானமே தலை சிறந்தது. ஆகையால் 'மலையில் இருந்து கீழே இறங்கி செல்லும் போது, வழியில் ஒரு பசுவைக் காண்பாய். அதன் வாலைப் பிடித்துக் கொண்டே செல். அது போகும் வழியைக் கால்வாயாக வெட்டு. பசு சாணம் போடும் இடத்தில் மதகு (மடை) அமைத்து, அது கோமியம் பெய்யும் இடங்களில் மறுகாலும், பசு படுக்கும் இடங்களில் ஏரி தோண்டு. ஒரு குறிப்பிட்ட இடத்தில் பசு மறைந்துவிடும். அங்கே கால்வாய் பணியை முடித்து மீதி தண்ணீர் அங்கே சேரும்படியாக ஒரு குளம் தோண்டு" என்றார்.

❂ அகத்தியர் சொன்னது போலவே அனைத்தையும் செய்தான் அந்த பிராமண இளைஞன். பசுவைக் கண்ட இடம் தான் சேரன்மகாதேவி. கடைசியாக பிராஞ்சேரி என்ற ஊரில் பசு மறைந்துவிட்டது. அங்கே மிகப்பெரிய ஏரியைத் தோண்டினான். இப்போதும், கடல் போல பரந்து கிடக்கிறது இந்த ஏரி.

❂ தான் வெட்டிய கால்வாயில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வரவேண்டும் என்பதற்காக விநாயகரை பிரதிஷ்டை செய்து, அவரது உடலில் மிளகை அரைத்து தேய்த்து, அபிஷேகம் செய்து, அந்த புனிதநீர் கால்வாய்க்குள் விழும்படி செய்தான். அப்படிப்பட்ட அந்த இளைஞனின் பெயர் இன்றுவரை தெரியவில்லை. எனவே அவனது மொழியின் பெயரால் 'கன்னடியன் கால்வாய்" என்று பெயர் வைத்து விட்டனர்.

தல பெருமை :

❂ ஒரே தேசத்துக்குள் கருத்து வேறுபாடு. ஆனால், கர்நாடகாவில் இருந்து வந்த ஒரு பெயர் தெரியாத இளைஞன், மலையாள மன்னரிடம் உதவி பெற்று, தமிழ்நாட்டில் கால்வாய் தோண்டிக் கொடுத்திருக்கிறான். இதனால் இந்தக் கால்வாய்க்கே 'கன்னடியன் கால்வாய்" என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

❂ கால்வாய் வெட்டியதோடு மட்டுமல்ல, இதில் எத்தனை ஆண்டுகளானாலும், தண்ணீர் வர வேண்டுமென்பதற்காக வித்தியாசமான வழிபாட்டுடன் கூடிய விநாயகர் கோவில் ஒன்றையும் கட்டி வைத்திருக்கிறான். அவன் கட்டிய 'மிளகு பிள்ளையார்" கோவில் திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் உள்ளது.

❂ மழை இல்லாத காலங்களில், இங்குள்ள விநாயகரது உடலில் மிளகை அரைத்து தேய்த்து, அபிஷேகம் செய்து, அந்த புனிதநீர் கால்வாய்க்குள் விழும்படி செய்தால் மழை வரும்.

பிரார்த்தனை :

❂ சேரன்மகாதேவி பகுதி விவசாய சங்கத்தினர், மழை இல்லாத காலங்களில், இங்குள்ள விநாயகரது உடலில் மிளகை அரைத்து தேய்த்து, அபிஷேகம் செய்து, அந்த புனிதநீர் கால்வாய்க்குள் விழும்படி செய்து வழிபாடு செய்கின்றனர்.

No comments:

Post a Comment