Wednesday, June 3, 2015

எதிர்மறை சக்திகளை விரட்டும் மந்திரங்கள்

இந்த உலகம் தோன்றியது முதல் இருமைத் தத்துவமே அதன் உள்ளார்ந்த வெளிப்பாடாக அமைந்திருக்கிறது. ஒளி–இருள், நல்லது–கெட்டது, பகல்–இரவு, இன்பம்–துன்பம் என்று யாவுமே இருமையின் மாற்ற இயலாத கோட்பாடுகளுக்குள் தான் அடங்கியிருக்கின்றன. பிறப்பு–இறப்பு என்னும் இருமைகளின் மையங்களிலேயே நமது வாழ்க்கை, அதன் இயல்பான விரிவுகளில் தமது சுய இருப்பை நிலைப்படுத்து கிறது.

அது எல்லா உயிர்களுக்கும் அடிப்படைத் தன்மை என்றாலும், மானுடம் மட்டுமே அதன் மாற்றவியலா நெறிமுறைகளையும் தாண்டிய பயண அனுபவங்களைச் சந்தித்துள்ளது. அதன் தன்னியல்பான பயணங்களில் பெற்ற அனுபவங்கள் நன்மையும் தீமையும் கலந்ததாகவே எப்போதும் இருந்து வந்ததை மானுடம் கண்டு வந்துள்ளது. அது எப்போதுமே தொடர்கதைதான்.

இருந்தாலும் வாழ்வின் இருமை அனுபவங்கள் யாவும் ஒருவரது மனதை, இயல்பாகவே எதிர்மறைகளுக்கு எதிராகவே இட்டுச் செல்கின்றன. எல்லோரும் நன்மையையே எப்போதும் விரும்புகிறோம். ஆனால் அது எப்போதும் சரிபாதிதான் சாத்தியம் என்பது சூரியன் போலச் சுடும் உண்மை.

அன்று முதல் இன்று வரையில் எதிர்மறை சக்திகளே வலிமையாக இருந்து கொண்டிருக்கின்றன என்பதை அனைவருமே அறிவர். ஆக்கப்பூர்வமான ஆளுமைத்திறன் கொண்டவர்கள் வாழ்வில் எதிர்மறை சக்திகளால் பாதிக்கப்படுவதில்லை. அவ்வாறு பாதிக்கப்பட்டாலும் மிக எளிதாக அதிலிருந்து விடுபட்டு விடுகின்றனர்.

‘உள்ளம் இலாதார் எய்தார் உலகத்து

வல்லியம் என்னும் செறுக்கு’ –என்ற குறள் மொழிக்கிணங்க தமது ஆளுமைத் திறனை வடிவமைத்துக் கொள்வதில்தான் ஒருவரது பெருமை அடங்கியுள்ளது.

எண்ணங்களைக் கவனியுங்கள், அவை வார்த்தைகளாக மாறுகின்றன.

வார்த்தைகளைக் கவனியுங்கள், அவை செயல்களாக மலருகின்றன.

செயல்கள் யாவுமே பழக்கங்களாக வடிவம் பெறுகின்றன.

பழக்கங்கள் தான் நமது குணத்தை நிர்ணயம் செய்கின்றன.

நமது குணமே நமது வாழ்க்கையை தீர்மானிக்கிறது.

ஆக எண்ணங்களே யாவற்றையும் தீர்மானம் செய்கிறது. உள்ளத்தின் ஆளுமையும், உருவத்தின் ஆளுமையும் ஒருங்கே அமையப்பெற்றவர்களே வாழ்வில் உன்னத நிலையை அடைகிறார்கள். ஆனால் மிகப் பெரும்பாலானோரின் நிலையானது சாதாரணமாகவே இருக்கும் தருணத்தில் வாழ்வின் எதிர்மறை சக்திகளால் பாதிக்கப்படுகிறார்கள். அவை பல வகையாக உள்ளன. சாதாரணக் கண் திருஷ்டி முதல் ஒரு ஆளை மரண நிலைக்குத் தள்ளக்கூடிய எண்ண நிலையை உண்டாக்கக்கூடிய பில்லி, சூனியம் வரையில் பல தரப்பட்ட வகைகள் உள்ளன. மிக நுட்பமான பல தகவல்களைக் கொண்ட அவை பற்றி ஆராயாமல், அதிலிருந்து விடுபட உதவும் சில வழிவகைகளை காண உள்ளோம்.

ஒருவரது லக்னம், லக்னாதிபதி, ராசி, ராசியாதிபதி, சூரியன், சந்திரன் ஆகியவை பாதிப்படைந்தோ, பலவீனமாகவோ இருந்தால் அவருக்கு கண் திருஷ்டியாலோ, எதிர்மறை சக்திகளாலோ கஷ்ட நஷ்டங்கள் உண்டாகும். 6,8,12 ஆகிய இடங்கள் பலமாக இருந்து, கோச்சார நிலைகள் பாதகமாக இருந்தாலும் அவற்றின் திசா புத்தி காலங்களிலும் மேற்கண்ட பிரச்சினைகள் உண்டாகும். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல பலனைத்தரும், அனுமன் மீது அமைந்த இரண்டு முக்கியமான மந்திரங்களை இங்கு காணலாம்.

‘ஓம் நமோ ஹனுமதே ருத்ர அவதாராய
பர யந்த்ர மந்த்ர தந்த்ர த்ராதக
நாசகாய ஸ்ரீ ராம தூதாய ஸ்வாஹா’
‘புத்திர் பலம் யஸோ தைர்யம்
நிர்பயத்வமரோகதா
அஜாத்யம் வாக்படுத்வம் ச
ஹநுமத் ஸ்மரணாத் பவேத்’

இதை ஒருவரது ஜன்ம நட்சத்திரத்தன்று காலையில் ஒரு அனுமனின் சன்னிதியில் இருந்து ஏதாவது ஒன்றை மட்டும் உச்சாடனம் செய்து ஆரம்பிக்க வேண்டும். பிறகு தினமும் காலையில் வீட்டிலிருந்தே ஜபம் செய்து வரலாம். இந்த மந்திரங்களை எப்போதுமே 48 அல்லது 108 என்ற எண்ணிக்கையிலேயே ஜபித்து வருதல் முக்கிய அம்சமாகும்.

ஒருவர் தமது வாகனங்களை வீட்டில் நிறுத்தும்போது, வடக்கு அல்லது கிழக்கு பார்த்தபடி நிறுத்துவதே சரியானதாகும். காலையில் வீட்டிலிருந்து கிளம்பும்போது மேற்கு அல்லது தெற்கு நோக்கிச் செல்லவேண்டிவந்தால், சிறிது தூரம் வடக்கு அல்லது கிழக்கு திசைகளில் சென்றபின்பே அந்தந்த திசைகளில் செல்ல வேண்டும். வாரம் ஒருமுறை ஏதாவது ஒரு நாளில் பூஜை செய்த எலுமிச்சம்பழத்தை வண்டியில் வைத்திருந்து, மறுவாரம் ஏதாவது நீர் நிலைகளில் போட்டுவிடவேண்டும். இவற்றின்மூலம் நமது வாகனங்கள் திருஷ்டி போன்ற எதிர்மறைசக்திகளால் பாதிக்கப்படுவதை தவிர்த்துவிடலாம். எலுமிச்சைக்கு சூழ்நிலையிலுள்ள நல்ல சக்திகளை தம்பால் ஈர்த்துக்கொள்ளும் அபூர்வ ஆற்றல் உண்டு. திருக்கோவிலில் இருந்து நல்ல தெய்வீக அலை

இயக்கத்தை தம்பால் ஈர்த்த அக்கனி, நமது வாகனங்களில் இருப்பது பல துன்பங்களைத் தடுக்கக் கூடிய சக்தி படைத்ததாகும். எதிர்மறை உணர்வுகளை வெளிப்படுத்தும் படங்கள், பொம்மைகள் ஆகியவற்றை வாகனங்களில் வைப்பதை தவிர்த்துவிட வேண்டும்.

முக்கியமாக, ஆதி சங்கர பகவத்பாதர் அருளிச்செய்த ‘ஸ்ரீ பவானி அஷ்டகம்’ என்ற மந்திர ஸ்துதி ஒருவரைப் பாதிக்கக் கூடிய சகல எதிர்மறைச் சக்திகளையும் விலகியோடச் செய்யும் சக்தி படைத்ததாகும்.

இதை ஒரு வெள்ளிக்கிழமையன்றோ, செவ்வாய்க்கிழமையன்றோ ஆரம்பித்து காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் 4 முறையோ, 6 முறையோ பாராயணம் செய்து வந்தால் சகல எதிர்மறை சக்திகளும் தூளாகி விடும். பிரச்சினைகள் தீரும் வரை செய்து வர வேண்டும்.

ஸ்ரீ பவானி அஷ்டகம்

‘ந தாதோ ந மாதா ந பந்துர் ந தாதா
ந புத்ரோ ந புத்ரி ந ப்ர்த்யோ ந பர்த்தா
ந ஜாயா ந வித்யா ந வ்ருத்திர் மமைவ
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி

பவாப்தாவபாரே மஹா துக்க பீரு
பபாத ப்ரகாமி ப்ரலோபி ப்ரமத்த
கு சம்ஸார பாச ப்ரபத்த ஸதாஹம்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி

ந ஜாநாமி தானம் ந ச த்யான யோகம்
ந ஜாநாமி தந்த்ரம் ந ச ஸ்தோத்ர மந்த்ரம்
ந ஜாநாமி பூஜாம் ந ச ந்யாஸ யோகம்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி

ந ஜாநாமி புண்யம் ந ஜாநாமி தீர்த்தம்
ந ஜாநாமி முக்திம் லயம் வா கடாசித்
ந ஜாநாமி பக்திம் வ்ரதம் வாபி மாதர்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி

கு கர்மி கு ஸங்கி கு புத்தி கு தாஸ
குலாச்சார ஹீன கடாச்சார லீன
கு த்ருஷ்டி கு வாக்ய ப்ரபந்த சதாஹம்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி

ப்ரஜேஷம் ரமேஷம் மஹேஷம் ஸுரேஷம்
தினேஷம் நிசீ தேஸ்வரம் வா கடாசித்
ந ஜாநாமி சான்யத் ஸதாஹம் சரண்யே
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி

விவாதே விஸாதே ப்ரமாதே ப்ரவாஸே
ஜலே ச அனலே பர்வதே ஷத்ரு மத்யே
ஆரண்யே ஷரண்யே ஸதா மாம் ப்ரபாஹி
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி

அநந்தோ தரித்ரோ ஜரா ரோகா யுக்தோ
மஹா க்ஷீண தீன ஸதா ஜாத்ய வக்த்ர
விபத்து ப்ரவிஷ்ட்ட ப்ரநஷ்ட்ட ஸதாஹம்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி

எங்கும் நிறையிறையருள் பொங்கிப் பரவிப் பழுதறு பவித்ர மங்களங்கள் யாவும் எங்கும் வளரட்டும்.

–அடுத்த வாரம்.. தவறாமல் தனயோகம் தரும் மந்திரங்கள்

உபயோகிக்கும் பொருட்களில் எதிர்மறை

எப்போதும் மன இறுக்கத்தோடு இருப்பவர்கள் சூழ்நிலைகளில் உள்ள எதிர்மறைத் தன்மையை மிக எளிதில் ஈர்த்துக்கொண்டு விடுகிறார்கள். அவர்களின் நரம்புகள் சந்திக்கும் மையப்புள்ளிகளில் மின்னோட்டத் தடுப்பில் சமநிலை குறைவுபடுகிறது. இதில் இருந்து விடுபட மிக எளிய வழி, வெளிர் நிறங்கள் கொண்ட பருத்தி ஆடைகளை அணிவதேயாகும். மேலும் ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் அசைவ உணவுகளை சாப்பிடாமல் இருந்து பலன்களை கவனித்து, அதன்படி வாழ்க்கை முறைகளை அமைத்துக் கொள்ளலாம்.

தினமும் அதிகாலையில் குளிக்கும் பழக்கத்தாலேயே ஒரு ஆற்றல் மையத்தின் சக்திப்பரவலை நமது உடலெங்கும் உணர முடியும். மேலும் புருவமத்தி, நெற்றி, புஜங்கள் ஆகிய இடங்களில் திருநீறோ, திருமண்ணோ அணிந்து இறை வணக்கம் செய்யலாம். மேலும், மரத்தாலான கட்டிலில் உறங்குவதும், மிக முக்கியமாக இலவம் பஞ்சில் செய்யப்பட்ட மெத்தை, தலையணைகளை உபயோகிப்பதும் அவசியம். படுக்கை விரிப்புகளும் பருத்தியாக இருப்பது முக்கியம். செயற்கை இழைகளால் செய்யப்பட்ட ஆடைகள், விரிப்புகள் யாவும் மனிதர்களின் கண் திருஷ்டி எனும் எதிர்மறை ஈர்ப்பை உள்வாங்கும் தன்மையுடையவை.

அதாவது அவற்றிலுள்ள இயல்பான செயற்கை மின் தூண்டலானது, பிறருடைய நுட்பமான உடலியல் மின்தூண்டுதலான எண்ணங்களின் வாயிலாக வெளியாகும் ஒருவித ஈர்ப்பு விசையைப் பெறுவதன்மூலமாக நல்லதோ, கெட்டதோ அதனதன் தன்மைக்கேற்ப விளைவுகளை உண்டாக்குகின்றன. பருத்தி ஆடைகள் அவ்வகையிலான ஈர்ப்பு நிலைகளை உள்வாங்குவதில்லை. அதுவும் இலவம்பஞ்சு படுக்கையோ, தலையணையோ உடல், மனம் என்ற இரு நிலைகளிலும் உடலியக்கக் காந்த மண்டலத்தை சமச்சீர் நிலைக்கு அமைத்து வைப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன.
நன்றி: தினத்தந்தி
.

No comments:

Post a Comment