நரம்பு பாதிக்கப்பட்டதால் ஒலிகளைக் கடத்தும் திறன் குறையும்பட்சத்தில், அதற்குத் தீர்வு தரும் மூலிகை மருந்துகளின் பயன் இதுவரை முழுமையாக ஆய்வு செய்து அறிவிக்கப்படவில்லை. காது, தலைப் பகுதியில் செய்யப்படும் வர்ம மருத்துவம் பயனளிக்கக் கூடும். தேர்ந்த வர்ம மருத்துவரை அணுகி ஆலோசியுங்கள். காது கேட்கும் திறன் குறைவுக்குப் பயன்படும் மூலிகை மருந்துகள் அதிகமில்லை. சளி, நீர் அடைப்பதால் ஏற்படும் கேட்கும் திறன் குறைவுக்குச் சுக்குத் தைலம் தேய்த்துக் குளித்தால், படிப்படியாகக் காது, தொண்டைக் குழலில் தங்கியுள்ள நீர்த்திவலைகள் குறைந்து கேட்கும் திறன் சீராகும். மூக்கடைப்புடன் கூடிய செவித்திறன் குறைவுக்கு, சீந்தில் எனும் தாவரத் தண்டின் உலர்ந்த பொடியை உள்மருந்தாக அரை டீ ஸ்பூன் அளவு வெந்நீருடன் சேர்த்துச் சாப்பிடுகையில், கபம் குறைந்து கேட்கும் திறன் சரியாகும். மருத்துவ வாய்ப்புகள் இல்லாத நரம்புதான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது எனும்பட்சத்தில், காது கேட்கும் கருவியின் உதவியை நாடுவதில் தயக்கம் வேண்டாம். 

எனக்குச் 54 வயதாகிறது. உயரம் 5.2 அடி, எடை 65 கிலோ. எனக்கு சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால், பி.பி. போன்ற எதுவும் இல்லை. ஆனால்,  டயட் இருப்பதும் சாத்தியமில்லை. என்னுடைய எடையைக் குறைக்க வேண்டும். எப்படிச் செய்வது?

முதல் விஷயம், பட்டினி இருந்து உடல் எடையைக் குறைக்க முடியாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். சில நேரத்தில் வயோதிகத்தை நோக்கிய உங்கள் பயணத்தில், கால்சியம் முதலான சத்துக்குறைவைக் கொடுத்துவிடக்கூடும். தேர்ந்தெடுத்த, சரியான அளவிலான, அதிகப் பழங்கள் கீரைகள் கொண்ட லோ கிளைசிமிக் உணவுத் திட்டம் உங்களுக்கு வேண்டும். தினசரி நடைப்பயிற்சியும் உடற்பயிற்சியும் 45 நிமிடங்கள், கபாலபாதி பிராணாயாமம் 30 நிமிடம் செய்வது போன்றவை உடல் எடையைக் குறைக்கப் பெரிதும் உதவும். குறிப்பிட்ட சில யோகாசனங்களை மூச்சுப் பயிற்சியுடன் இணைத்து, தற்போது Dynamic yoga எனக் கற்றுத்தருகிறார்கள். இவற்றைத் தொடர்ச்சியாகச் செய்தாலே நல்ல பலன் கிடைக்கும். குடம்புளி எனும் கோகம் புளி பற்றி உங்களுக்குத் தெரியுமா? பொதுவாகக் கேரளத்தில் மீன்கறி சமைக்க, இந்தப் புளியைப் பயன்படுத்துகிறார்கள். இந்தப் புளிதான் நாம் பண்டைக் காலத்தில் பயன்படுத்தியது என்று சொல்வோரும் உண்டு. இந்தப் புளியில் Hydroxy citrate என்ற சத்து உண்டு. உடல் எடையைக் குறைக்க இது உதவுவதாகப் பல ஆய்வுகள் சொன்னதால், இந்தக் குடம்புளிச் சத்து எடை குறைக்கும் பல மருந்துகளிலும், உணவு வகைகளிலும் பயன்படுகிறது. நீங்கள் இந்தப் புளியைக்கொண்டு சமைக்கலாம். அல்லது அது உள்ள மூலிகை மருந்துகளை மருத்துவ ஆலோசனைக்குப் பின் வாங்கிப் பயன்பெறலாம்.வெந்தயம், பூண்டு, கொள்ளு, சின்னவெங்காயம் ஆகியவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளுங்கள். திட உணவு வரிசையில் தினசரி தினை, ராகி, கம்பு, சோளம், வரகரிசி ஆகியவற்றில் ஒன்று இடம்பெறட்டும். இட்லி-தோசையாக, சோறாக, சிற்றுண்டியாகச் சாப்பிடலாம். இந்தத் தானியங்களில் செய்யப்பட்ட உணவு வகைகளைக் குறைந்த அளவு சாப்பிட்டாலே பசியைப் போக்குவதுடன், அதிக ஊட்டமும் தரும் லோகிளைசிமிக் தன்மையுடைய உணவு வகைகள் இவை.

தேவையற்ற முடியை நிரந்தரமாக அகற்ற முடியுமா?

எனக்கு வயது 21, பெண். எனக்கு கீழ் தாடையிலும் வயிற்றிலும் தேவையற்ற முடி வளர்கிறது. லேசர் சிகிச்சை, சித்தா, ஆயுர் வேதச் சிகிச்சைகள் எடுத்து விட்டேன். ஆனால், எந்தப் பலனும் இல்லை. ஹார்மோன் சமநிலையின்மை உறுதியாகியிருக் கிறது. இதற்கு என்ன தீர்வு?
பெயர் வெளியிட விரும்பவில்லை
தேவையற்ற முடிகளுக்கான முக்கியக் காரணம் ஹார்மோன்களில் ஏற்பட்ட லேசான மாறுதலாக இருக்கக் கூடும். சில நேரம் மாதவிடாய் சீரில்லாது இருக்கும், சினைப்பை நீர்க் கட்டிகளிலும் இப்பிரச்சினை வரக்கூடும். புறச் சிகிச்சையில் முடிகளை நீக்குவது என்பது தற்காலிக நிவாரணம்தான் கொடுக்கும்.
சோற்றுக் கற்றாழை எனும் வெகு சாதாரணமாக வளரும் மூலிகைச் செடிக்குச் சித்த மருத்துவ இலக்கியங்களில் குமரி என்று பெயர். இந்த மூலிகையின் உள்மடலில் இருக்கும் சோற்றுப் பகுதியை எடுத்து ஜூஸ் செய்து சாப்பிடுவதும், இச்சோற்றில் பனங் கருப்பட்டி, பூண்டு சேர்த்துக் கிளறிச் செய்யப்படும் லேகியத்தைச் சாப்பிடுவதும் ஹார்மோன் சீர்கேட்டைச் சரிசெய்ய உதவும்.
கூடுதலாகப் பாசிப் பயறு, மஞ்சள், வெட்டிவேர், விலாமிச்சை வேர், சீமை கிச்சிலிக் கிழங்கு, கோரைக் கிழங்கு ஆகியவை சேர்த்துத் தயாரிக்கப்படும் நலுங்கு மாவைத் தேய்த்துக் குளிப்பதும் நல்லது.
முடியை அகற்றும் இன்னொரு மூலிகை வழியும் உண்டு. கோரைக் கிழங்கு, கஸ்தூரி மஞ்சள் இரண்டும் ஒரு பங்கும்; அம்மான் பச்சரிசி எனும் எளிய மூலிகையை அதில் பாதி பங்கும் சேர்த்து நன்கு மை போல் அரைத்துக்கொண்டு, தேவையற்ற முடியுள்ள (மீசைப் பகுதியில்) போட்டுவைத்து அரை மணி நேரம் கழித்துக் கழுவிவந்தால் முடி நீங்கும். சிலருக்கு அம்மான் பச்சரிசி அரிப்பையும் தடிப்பையும் உண்டாக்கும் என்பதால், போட்டவுடன் அரிப்போ, தடிப்போ வருகிறதா எனச் சிறிய இடத்தில் தடவிப் பரிசோதித்த பின் பரவலாகப் பயன்படுத்த வேண்டும்.
May 13, 2014 

http://tamil.thehindu.com/general/health