Saturday, April 12, 2014

நலம் வாழ- மாலதி பத்மநாபன்

தலைவலி
அதிமதுரம், சீரகம் இரண்டையும் சம அளவு எடுத்துக்கொள்ளவும். இரண்டும் நாட்டு மருந்துக் கடையில் பொடியாகக் கிடைக்கும். இரண்டையும் கலந்து எடுத்துக்கொள்ளவும். இந்தப் பொடியைத் தேனுடனோ, வெந்நீரிலோ கலந்து சாப்பிட்டால் எப்பேர்ப்பட்ட தலைவலியும் குறைந்துவிடும்.
வயிற்றுப் பிரட்டலுக்கு (நாஸியா)
1 பிடி கறிவேப்பிலை, அதன் தண்டு, அரை ஸ்பூன் மிளகு, 1 டேபிள்ஸ்பூன் ஓமம். இவற்றைத் தனித்தனியாக வறுத்து, உப்பு சேர்த்துப் பொடி செய்துவைக்கவும். வயிறு சம்பந்தப்பட்ட எல்லாவற்றுக்கும் இது நல்லது. வயிற்றுப் பிரட்டல் இருந்தால், மோரில் கலந்து சாப்பிடவும், வயிற்று வலிக்குச் சூடான சாதத்துடன் கலந்து சாப்பிடவும்.
மூட்டுவலி
கால் முட்டி, கணுக்கால், கைகளில் வீக்கம் இருந்தால் அரிசி களைந்த நீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். அதைச் சூடுபடுத்தி 1 பிடி கல்உப்பு போட்டு, வீக்கம் இருக்கும் இடத்தில் விடவும். இதைத் தொடர்ந்து செய்து வந்தால் வீக்கம் சரியாகிவிடும்.
நரம்புத் தளர்ச்சி
நரம்புத் தளர்ச்சி இருந்தால் முருங்கைக் கீரையை 1 பிடி எடுத்து, நன்றாகச் சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும். அதனுடன் வேப்பிலைக் கொழுந்தைக் கொஞ்சம் எடுத்து 2 டம்ளர் நீரில் போட்டு நன்றாகக் கொதிக்க வைக்கவும். நன்றாகக் கொதித்ததும், எடுத்து ஆற வைத்து அடுத்த நாள் காலையில் குடிக்கவும். அத்திப் பழமும் சேர்த்துக்கொண்டால், அதுவும் நல்லது.
நகச்சுத்தி
பச்சரிசி சாதத்தைச் சூடாக எடுத்து, அதில் ஒரு ஸ்பூன் மஞ்சள்தூள், கால் ஸ்பூன் சுண்ணாம்பு ஆகியவற்றைச் சேர்த்து உடல் பொறுக்கக்கூடிய சூட்டில் நகத்தில் வைத்து நன்றாகக் கட்டிவிடவும். இப்படிச் செய்தால் நகச்சுத்தி பழுத்து உடைந்துவிடும்.
பி.பி., சர்க்கரை நோய்க்கு
சர்க்கரை நோய் வருவதைத் தவிர்க்க, நெல்லிக்காயின் கொட்டை, நாவல்பழக் கொட்டை பொடிகளை எடுத்து, 1 டம்ளர் நீரில் 1 ஸ்பூன் பொடியைப் போட்டுக் குடிக்கவும். இரண்டு பொடிகளும் நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும்.
வியர்வை, உடல் துர்நாற்றம்
தமிழ் மருந்துக் கடைகளில் ஆவாரம்பூ கிடைக்கும். அதை வாங்கி நிழலில் பரத்தி, உலர வைக்கவும். அதை மிக்ஸியில் நைஸாக அரைத்து, அதனுடன் பயத்தம் பருப்பு மாவைச் சேர்த்துத் தேய்த்துக் குளிக்கவும். உடல் துர்நாற்றம் நீங்கும்.
எலும்பு உறுதியாக இருக்க
வாரத்தில் ஒரு முறையாவது பிரண்டை எனப்படும் மூலிகைத் தண்டை உணவுடன் சேர்த்துக்கொண்டால், எலும்புத் தேய்மானம் அடையாது. இதற்குப் பிரண்டை, மிளகு, உளுத்தம்பருப்பு, புளி ஆகியவற்றை வறுத்து, துவையல் செய்து சாப்பிடவும். இட்லி, தோசை, சாப்பாட்டுக்குத் தொட்டுச் சாப்பிடலாம். மெனோபாஸுக்கும் பிரண்டை நல்லது.
கரும்புள்ளி மருவுக்கு
முகத்தில், கழுத்தில் வரும் கரும்புள்ளி மருவை நீக்க அரிசி திப்பிலியை வாங்கி வறுத்து, நைஸாக அரைத்து வைத்துக்கொள்ளவும். அந்தப் பவுடரில் தேன் சேர்த்து நன்றாகக் குழைத்துக் கரும்புள்ளி, மரு இருக்கும் இடத்தில் தடவவும். சில நாட்களில் மறைந்துவிடும்.
வாயுப் பிடிப்பு, மூச்சுப் பிடிப்பு
ஓமத்தை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ளவும். இதில் சம அளவு சர்க்கரை சேர்த்து. Cramps இழுத்துப் பிடிக்கும்போது 1 ஸ்பூன் சாப்பிட்டால் வலி நீங்கும். இதை வெந்நீரில் போட்டுச் சாப்பிடவும்.
வாய் துர்நாற்றம்
அஜீரணம், பல் சுத்தமாக இல்லாததாலும் வரக்கூடும். இதற்கு வாரத்தில் 2 நாட்கள் முருங்கைக் கீரையைச் சாப்பாட்டுடன் சேர்த்துச் சாப்பிட வேண்டும். முருங்கைக்கீரையைக் கூட்டாகவோ, பொரியலாகவோ செய்து சாப்பிடலாம். அது மட்டுமில்லாமல் இரவு படுக்கப் போகும் முன், கண்டிப்பாகப் பல் தேய்த்துவிட்டே படுக்க வேண்டும். இது நாம் கடைப்பிடிக்க வேண்டிய அவசியப் பழக்கம்.
குழந்தை வயிற்றுவலிக்கு
பச்சைக் குழந்தைகளுக்கு வயிற்று வலி வந்தால் கட்டிப் பெருங்காயத்தை வெந்நீர் விட்டு நன்றாக உரசி எடுத்தால், சந்தனம் போல் வரும். அதை தொப்புளைச் சுற்றிப் போட்டால் வயிற்று வலி நீங்கும். குழந் தையின் அழுகையும் நிற்கும்.

சைனஸுக்கு நிரந்தரத் தீர்வு சைனுசைடிஸ் நோய் ஒவ்வாமையாலும், உடலின் இயல்பான பித்தம் (சூடு) அளவுக்கு அதிகமாவதாலும் ஏற்படுகிறது. காற்றை நாம் மாசுபடுத்தியதன் விளைவாலும், அவசர வாழ்வில் தினசரித் தலைக்குக் குளிப்பது, வாரம் ஒரு முறையேனும் எண்ணெய் குளியல் செய்வது போன்ற நல்வாழ்வுப் பழக்கங்களைத் தொலைத்ததாலும் தான், இந்தச் சைனுசைடிஸ் நோய் வருகிறது.

குளித்தல் என்றாலே தலைக்கு நீருற்றிக் குளிப்பதுதான் சரியானது. “முடி கொட்டிரும். முகம் வீங்கும். சளி பிடிக்கும். தும்மல் வரும். நேரமே இல்லை” எனப் பல காரணங்களை முன்னிறுத்தி இன்று நம்மில் பலர் கழுத்துக்கும் இடுப்புக்கும் குளிப்பதைக் கலாசாரமாக்கிக் கொண்டிருக்கிறோம். குளிப்பது என்பது அழுக்கு நீக்க மட்டுமல்ல. இரவில் உடலில் இயல்பாய் ஏறும் பித்தத்தை (சூட்டை) தணிக்கவே காலையில் நாம் குளிக்கிறோம். வெறும் அழுக்குப் போக என்றால், இரவில் மட்டும்தானே குளித்துப் பழகியிருப்போம். எனவே, இந்த நோயை அறவே போக்க, தினசரிக் குளியல் முதலில் மிக அவசியம்.
நோய் நீங்கும் காலம் மட்டும், மருத்துவர் ஆலோசனையுடன் சுக்குத் தைலம், சிரோபார நிவாரணத் தைலம், பீனிசத் தைலம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைத் தலைக்குத் தேய்த்துக் குளிக்க வேண்டும். சித்த மருத்துவ மூலிகையான சீந்தில், சைனுசைடிஸ் நோய்க்கான மிகச் சிறந்த தாவரம். இதன் தண்டை வைத்துத் தயாரிக்கும் மருந்துகள் நோய் எதிர்ப்பாற்றலைச் சீராக்கி (Immune Modulation) மூக்கடைப்பைச் சரியாக்கும் எனப் பல ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. பெருவாரியான நேரங்களில், சைனுசைடிஸ்க்கு அறுவை சிகிச்சை நிரந்தரத் தீர்வு அல்ல. ஏனென்றால், பாலிப்பையும் நாசித்தண்டு வளைவையும் சீர்படுத்துவதைத் தாண்டி, நோய் எதிர்ப்பாற்றலில் உள்ள hypersensitivityயைச் சீராக்காமல், இதை முழுமையாகக் குணப்படுத்துவது கடினம். அதனால், சில காலம் சித்த மருந்துகளுடன், மூச்சுப் பயிற்சி செய்துவாருங்கள்.
யோகாசனக் கிரியா பயிற்சியிலும், பிராணாயாமப் பயிற்சியிலும் மூக்கடைப்பைத் தடுக்க முடியும். நொச்சித் தழையில் ஆவி பிடிப்பதை வாரம் இரு முறையாவது செய்வது நாசித்தண்டு வளைவில் சேரும் கபத்தை இளக்கி, வெளியேற்றிச் சுவாசத்தைச் சீராக்கப் பெரிதும் உதவும்.
உணவில் காரச் சுவை தேவைப்படும் இடத்தில் எல்லாம் மிளகைச் சேர்த்துவருவது மிக முக்கியம். மிளகில் உள்ள piperine, piperidine சத்துகள் நோய் எதிர்ப்பாற்றலைச் சீர்படுத்திச் சைனுசைடிஸைக் கட்டுப்படுத்தும் அற்புத உணவு. இனிப்பு, பால், நீர்க் காய்கறிகளைச் சில காலம் மட்டும் அதிகம் எடுத்துக்கொள்ளாமல் இருப்பதும் அவசியம்.
1. கண்ணைச் சுற்றிக் கருவளையம்:
பாலை நன்றாகக் காய்ச்சி ஆற விட்டு வடிகட்டி வைக்கவும். ஒரு கரண்டியில் அந்தப் பாலை எடுத்துக்கொண்டு, சுத்தமான வெள்ளைத் துணி அல்லது பஞ்சை எடுத்து அந்தப் பாலில் தோய்த்து, கண்களின் மீது வைத்துக்கொண்டு 15 நிமிடம் படுத்துக்கொள்ளவும். இப்படிச் செய்துவந்தால் கண் சோர்வு நீங்குவதுடன் கருவளையமும் மறைந்துவிடும். கண்கள் பொலிவுடன் இருக்கும். வெயில் காலத்தில் இது கண்களுக்கு நல்ல பாதுகாப்பைத் தரும்.
2. இளநரை, கண் எரிச்சல், பித்தம்:
அகத்திக்கீரையை 15 நாளுக்கு ஒரு முறை சமைத்துச் சாப்பிட்டுவரவும். அகத்திக்கீரை பொடியாகவே நாட்டுமருந்துக் கடைகளில் இப்போது கிடைக்கிறது. அதை வாங்கி ஒரு டம்ளர் மோரில் ஒரு ஸ்பூன் கலந்து வெறும் வயிற்றில் வாரத்துக்கு 3 முறை சாப்பிடவும். இம் மூன்றுக்கும் அது நல்ல மருந்து.
3. படபடப்புக்கு:
ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சுக்குப்பொடி சேர்த்துக் கொதிக்க வைக்கவும். பிறகு, ஒரு கட்டி வெல்லத்தைச் சேர்த்துக் கொதித்ததும் இறக்கி மிதமான சூட்டில் காலை, மாலை என்று 3 நாளைக்குத் தொடர்ந்து சாப்பிட்டால் படபடப்பு நீங்கிவிடும்.
4. நாக்கில் வெண்படலம் படிந்திருந்தால்:
துளிராக ஏழு அல்லது எட்டு வேப்பங் கொழுந்தை எடுத்துக்கொள்ளவும். ஒரு சிறிய துண்டு அதிமதுரத்தைத் தட்டி, ஒரு டம்ளர் நீரில் வேப்பங்கொழுந்தையும் அதிமதுரத்தையும் சேர்த்துக் கொதிக்க விடவும். அதை வடிகட்டித் தேன் சேர்த்துக் குடித்தால் ஜீரண சக்தி ஏற்படும். நாக்கில் படிந்த வெண்படலம் மறைந்துவிடும்.
5. வயிற்றுப் பருமன் குறைக்க:
ஓமம் 2 ஸ்பூன், ஒரு ஸ்லைஸ் (பத்தை அல்லது கீற்று) அன்னாசியை எடுத்துக்கொள்ளவும். அன்னாசியை 3 சிறு துண்டுகளாக்கவும். இதைத் தண்ணீரில் தனித்தனியாக ஊற வைக்கவும். 20 நிமிஷங்களுக்குப் பிறகு இரண்டையும் அந்தத் தண்ணீரை விட்டு மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். அதை அப்படியே டம்ளரில் ஊற்றிவைக்கவும். அதில் உள்ள மேல்நீரை (தெளிந்தது) மட்டும் காலையிலும் மாலையிலும் அப்படியே இறுத்து, வடிகட்டாமல் குடிக்கவும். இதனால் வயிறு இளைக்கும்.
உடல் பருமன் குறைய
வெள்ளைப் பூசணிக் காயை எடுத்து ஜூஸ் பிழிந்து காலையில் குடித்து வந்தால் உடல் பருமன் குறையும். நெஞ்சு எரிச்சலும் வராமல் இருக்கும்.
சிறுநீரகத்தில் உப்பு தங்காமல் இருக்க
வாழைத்தண்டு, புடலங்காய், கீரைத் தண்டு, முள்ளங்கி, திராட்சை, வெங்காயம், வெள்ளரிப் பிஞ்சு, வெங்காயத்தாள் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைத் தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளவும்.
ரத்த அழுத்தம் குறைய
செம்பருத்திப் பூக்கள் மூன்றை எடுத்து அவற்றின் இதழ்களைத் தண்ணீரில் போட்டு நன்றாகக் கொதிக்க வைக்கவும். பிறகு எடுத்துப் பிழிந்து வடிகட்டி, கொஞ்சம் பால் சேர்த்துச் சாப்பிட்டால் ரத்தஅழுத்தம் குறையும்.
பித்தம் தலைசுற்றல்
1 பிடி கொத்தமல்லித் தழையை அரைத்துச் சாறு எடுக்கவும். அதில் பனை வெல்லம் சேர்த்துச் சாப்பிட, தலைசுற்றல் போகும்.
புழு வெட்டு, வழுக்கை
1 கோப்பை நல்லெண்ணெ யில் 7, 8 பூண்டை நசுக்கிப் போடவும். அதை நன்றாகக் காய்ச்சவும். இறக்கி வைத்து 1 மூடி எலுமிச்சம் பழத்தில் சாறு பிழிந்து எடுத்துச் சேர்த்து வைக் கவும். பூச்சிவெட்டு இருக்கும் இடத்தில் 2 சொட்டு தேய்த்து வர, முடி வளர ஆரம்பிக்கும்.
சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்க
நாவல் கொட்டை பொடி, வெந்தயப் பொடி, கடுக்காய் தோல் ஆகியவற்றில் சமபாகம் எடுத்துக் கலந்து வைக்கவும். கொதிக்கும் தண்ணீரில் இதை 1 ஸ்பூன் போட்டு நன்றாகக் கலந்து காலையில் கால் டம்ளர் குடிக்கவும்.
வறட்டு இருமல், சூடு
அதிமதுரம் பொடியை வாங்கி, 1 டம்ளர் நீரில் 1 ஸ்பூன் பொடி போட்டுக் கொதிக்க வைத்து, கொஞ்சம் பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிடவும்.
வாயு, வயிற்றுவலி
1 ஸ்பூன் ஜீரகத்தை வெறும் வாணலியில் நன்றாக வறுத்து 1 டம்ளர் தண்ணீர் விடவும். நன்றாகக் கொதித்ததும் பனைவெல்லம் சேர்த்துக் குடிக்கவும்.
கர்ப்பப் பையில் நோய் வராமல் தடுக்க
துளசி, வில்வம், அருகம்புல், மிளகு உள்ளிட்டவை நாட்டு மருந்துக் கடைகளில் பொடியாகவே கிடைக்கும். இவற்றை வாங்கிக் கலந்து வைத்துக்கொண்டு வாரத்துக்கு ஒரு நாள் 1 ஸ்பூன் பொடியை வெந்நீரில் கலந்து சாப்பிடவும்.
நோய்எதிர்ப்பு சக்தி
தினம் குடிக்கும் தண்ணீரில் எலுமிச்சம் பழத்தைப் பாதியாக வெட்டி போடவும். மறுநாள் காலை வரை இந்தத் தண்ணீரைக் குடித்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். புற்றுநோயை எதிர்க்கும் சக்தி இதில் உண்டு.
நீர்சுருக்கு எரிச்சல்
இதோ வெயில் காலம் ஆரம்பமாகிவிட்டது. இதன் காரணமாக வெப்பம் அதிகமாகி நீர் சுருக்கு எரிச்சல் அடிக்கடி வரக்கூடும். இதற்கு நல்ல தீர்வு அளிக்கும் மருந்து, நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் வெண்டை விதை. இதை 2 டம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் அளவுக்குப் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும். பார்லி கஞ்சி போல வரும். இதைக் குடித்தால் நீர்சுருக்கு சரியாகிவிடும்.
ஒற்றைத் தலைவலி
வெள்ளை எள்ளைச் சிறிது பால் விட்டு நைசாக அரைத்து, நெற்றியில் பற்று போடவும். காலையில் பற்று போட்டுக்கொண்டு இளம் வெயிலில் 15 நிமிடங்கள் நிற்க வேண்டும். இதைத் தொடர்ச்சியாக 4 நாட்கள் செய்து வந்தால் தலைவலி போய்விடும். தொடர்ந்து இளம் வெயிலில் நின்றால் வைட்டமின் டி கிடைக்கும்.
பொடுகுத் தொல்லை
மருதாணி பொடி 1 ஸ்பூன், டீத்தூள் 1 ஸ்பூன், கடுக்காய்த்தூள் அரை ஸ்பூன், துளசிச் சாறு 2 ஸ்பூன், நெல்லி பொடி 1 ஸ்பூன். இவை அனைத்தையும் கலந்து தலையில் தேய்த்துக் குளித்தால், பொடுகுத் தொல்லை போய்விடும். தலைக்குச் சுடுதண்ணீர் ஊற்றாமல், வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்கவும்.
மூட்டு வலி
தினமும் காலை 4, 5 சின்ன வெங்காயத்தை எடுத்து நல்லெண்ணெயில் வதக்கிச் சாப்பிடவும். சாதத்துடன் ஒரு பிடி முருங்கை இலை, சோற்றுக் கத்தாழை ஒன்று, கற்பூரம் 2 வில்லைகள், பூண்டு 10 பல் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும்.
சோற்றுக் கற்றாழையைத் தோல் சீவி, அதனுள் இருக்கும் சதைப் பகுதியை எடுக்கவும். இரும்பு வாணலியில் நல்லெண்ணெய் விட்டுப் பூண்டு, முருங்கை இலை, கத்தாழை ஆகியவற்றைப் போட்டு நன்றாகக் காய்ச்சவும். சத்தம் அடங்கியதும் கற்பூரத்தைப் போட்டு இறக்கி ஆறவைத்துத் தினமும் இதைத் தடவி வந்தால் மூட்டுவலியும், காலில் எங்காவது வீக்கம் இருந்தால் அதுவும் சரியாகிவிடும்.
சைனஸ்
சைனஸ் இருப்பவர்கள் தண்ணீரை நன்றாகக் கொதிக்கவைத்து 1 பிடி துளசி, 1 ஸ்பூன் ஓமம் ஆகியவற்றைப் போட்டு ஆவி பிடிக்கவும். இதனுடன் வாரத்தில் 2 நாளுக்குக் கண்டந்திப்பிலி ரசத்தைச் சூடாகச் சாப்பிட்டால் சைனஸ் மறைந்துவிடும். திப்பிலி 2, மிளகு 1 ஸ்பூன், கொஞ்சம் கறிவேப்பிலை, துவரம் பருப்பு 1 ஸ்பூன் ஆகிய அனைத்தையும் வறுத்துப் பொடித்து வைத்துக்கொள்ளவும். இதை வைத்து ரசம் செய்து சாப்பிட்டால் சைனஸுக்கு நல்லது.
வாய்ப்புண், அஜீரணம்
மல்லிவிதையை நன்றாக வறுத்து மிக்ஸியில் நைசாக பொடி செய்து வைத்துக்கொள்ளவும். அஜீரணம், பசி இல்லாமை உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்தால் மல்லிவிதைப் பொடியை 1 டம்ளர் தண்ணீரில் போட்டுக் கொதிக்கவைத்துக் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் சரியாகிவிடும். வாய்ப்புண்ணுக்கு மல்லிவிதையை வறுக்காமல் மிக்ஸியில் நைஸாக அரைத்துச் சலித்துவைக்கவும்.
நாக்கில் புண் இருந்தால் நாக்கிலும் வாயிலும் நன்றாகத் தடவி வாயைத் திறந்து வைத்துக்கொண்டால் எச்சில் வரும். 2 நிமிடங்கள் கழித்து வாயைக் கொப்பளிக்கவும். இதைக் காலை, மாலை செய்து வரவும்.
உடல் அரிப்பு
பாசிப்பருப்பு மாவு, பூலாங்கிழங்குப் பொடி, குப்பைமேனி, வசம்புத் தூள் ஆகியவற்றைக் கடையில் வாங்கிக் கலந்து வைத்துக்கொள்ளவும். குளிக்கும்போது 2 ஸ்பூன் பொடியில் 1 ஸ்பூன் எலுமிச்சைச் சாற்றைக் கலந்து, உடல் முழுவதும் தடவவும். 5 நிமிடங்கள் கழித்துக் குளிர்ந்த நீரில் குளிக்கவும். இப்படிச் செய்தால், உடல் அரிப்பு சரியாகிவிடும்.

No comments:

Post a Comment