Friday, February 21, 2014

கல்வியில் சிறக்க ஸ்ரீலஷ்மி ஹயக்ரீவர் வழிபாடு

சென்னைக்கு அருகில் காட்டாங் கொளத்தூரை அடுத்துள்ள செட்டிப் புண்ணயத்தில் கோவில் கொண்டுள்ள அருள்மிகு தேவநாதசுவாமி திருக்கோயிலில்உள்ள ஸ்ரீயோக ஹயக்ரீவர் சன்னதியில் அர்ச்சித்து பூஜித்தால் கல்வியில் சிறந்து விளங்க முடியும் என இத்திருக்கோயில் தலபுராணம் தெரிவிக்கிறது. இந்த ஆலயத்தில் ஸ்ரீயோக ஹயக்ரீவர் வீற்றிருந்து மாணவ, மாணவிகளுக்கு கல்வி அருள் பாலித்து வருகிறார். ஆண்டுத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவதற்கும், தொடர்ந்து உயர்கல்வி பெறுவதற்கும் மாணவ, மாணவிகள் இத்தலத்துக்கு வந்து வழிபடுகிறார்கள்.
இத்தலத்துக்கு பலவித பணிகளால் வர இயலாதவர்கள் அருகில் உள்ள விஷ்ணு கோயிலில் உள்ள ஸ்ரீலஷ்மி ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை அணிவித்துப் பிரார்த்தனை செய்துகொள்ளலாம். பள்ளி, கல்லூரிகளில் இறுதித்தேர்வின்போது, மாணவர்களுக்கு ஏற்படும் பயத்தைப் போக்கவும், ஞாபக சக்தியை அதிகரிக்கவும், இப்பிரார்த்தனை பெரிதும் உதவுவதாகப் பயன் பெற்ற பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், அதிக மதிப்பெண்கள் பெறவும், ஒவ்வொரு ஆண்டும் செட்டிப் புண்ணியம் கோயிலில் வித்யா தோஷ நிவர்த்தி சங்கல்ப அர்ச்சனை பூஜையின்போது பேனா, பென்சில் வைத்து அர்ச்சனை செய்கின்றனர். பிறகு, பூஜையில் வைத்து அர்ச்சிக்கப்பட்ட ரட்சையை, முன்பதிவு செய்த மாணவர்களுக்கு கூரியரில் அனுப்பி வைக்கிறார்கள். அந்த ரட்சையைக் கையில் கட்டிக்கொண்டால், கல்வியில் மேன்மை உண்டாகும் என்பது நம்பிக்கை. 350 ஆண்டுகளுக்கு முன்பு பழமைவாய்ந்த புகழ் பெற்ற ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோவில் இங்கு நிர்மாணிக்கப்பட்டது. 

கடலூர் அருகே உள்ள திருவஹிந்திரபுரம் ஸ்ரீ தேவநாதனுடைய மற்றொரு அதி சுந்தரமான பிரயோக சக்கரத்துடன் சேவை தரும் திவ்யமங்கள விக்ரகத்தை எடுத்து வந்து செட்டிப்புண்ணியம் என்ற இவ்விடத்தில் எழுந்தருள வைத்தனர்.
இத்திருமூர்த்தியுடன் ஸ்ரீயோக ஹயக்ரீவரும் கொண்டுவரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment